அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அது குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, 12 நாட்டை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ, இக்வடோரியல் கினியா, எரித்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டிரம்பின் இந்த உத்தரவு வரும் 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. மேலும் வெளிநாட்டினர் நமது நாட்டிற்குள் நுழைந்து அமெரிக்கர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஏற்க முடியாது என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டு மக்களுக்கு தடை: அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப்..!

இந்நிலையில் அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் கடந்த 2023-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'மேஜர் லீக் கிரிக்கெட்' என்ற டி20 தொடரின் 3-வது சீசன் அடுத்த வாரம் (13-ம் தேதி) தொடங்க உள்ளது. இதில் பல வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொண்டு விளையாட உள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த தடை உத்தரவு காரணமாக ரஷீத் கான், அஸ்மத்துலா ஓமர்சாய், நவீன் உல் ஹக், நூர் அகமது உள்ளிட்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இருப்பினும் மேஜர் லீக் கிரிக்கெட் 'மிகப்பெரிய விளையாட்டுத் தொடர்' என வரையறுத்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான அனுமதி பெறுவதற்கு ஆலோசித்து வருவதாக மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் நிர்வாகிகள் தகவல் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டு மக்களுக்கு தடை: அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப்..!