வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகிய பிறகு, இந்தியா - வங்கதேசம் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வங்கதேசத்தில் அவரது கட்சியான அவாமி லீக் தடை செய்யப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இதனால், ஆத்திரமடைந்த வங்கதேச அரசு, தங்கள் நாட்டு அரசியலில் இந்தியா தலையிடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது. இந்த நிலையில் வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தொடா் தாக்குதல் நடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டும் எழுந்தது.

இதைத்தொடர்ந்து, இரு நாடுகளிடையே வர்த்தக உறவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்தியாவுடன் பரஸ்பர உறவையே விரும்புவதாக வங்கதேச இடைக்கால அரசு அண்மையில் தெரிவித்திருந்தது. வங்கதேச இடைக்கால அரசு எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது; பரஸ்பர உறவு, மரியாதை மற்றும் புரிதலும் இரண்டு நாடுகளையும் ஒன்றிணைத்து மக்களின் நலனுக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.
இதையும் படிங்க: மாட்டிக்கிட்டியே பாக்., சேதமடைந்த விமானப்படை தளங்கள் தார்ப்பாய் போட்டு மூடல்.. வெளியானது ஆதாரம்..!
தியாக திருநாளானது, தியாகம், தாராள மனப்பான்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றால் ஒன்றிணைக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றாக பணியாற்ற உத்வேகம் அளிக்கிறது என கடிதத்தில் முகமது யூனுஸ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடியிடம் தான் வலியுறுத்தியதை அவர் மறுத்துவிட்டார் என முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள சாத்தம் இல்லத்தில், முகமது யூனுஸ் பேசியதாவது: பிரதமர் மோடியுடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஷேக் ஹசீனாவை இந்தியாவில் வைத்திருப்பது உங்கள் விருப்பம். அவரை கைவிட வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. ஷேக் ஹசீனா சமூகவலைதளத்தில் பேசுவதை நிறுத்த வலியுறுத்தினேன். இது சமூக வலைதளம். அதை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது என பிரதமர் மோடி கூறிவிட்டார்.
ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி வங்கதேசம் இந்திய அரசிற்கு கடிதம் எழுதி உள்ளது. சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகிறது. தீர்ப்பாயம் விசாரணை நடவடிக்கையை தொடங்கி உள்ளது. அவர் செய்த குற்றங்களுக்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இன்னும் பல குற்றங்கள் விசாரணையில் தெரியவரும். நாங்கள் ஒரு சட்ட நடைமுறையைப் பின்பற்றுகிறோம்.

அது சட்டப்பூர்வமாகவும், மிகவும் முறையாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். கோபத்தில் எதையும் செய்யக்கூடாது என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம். இந்தியாவுடன் சிறந்த உறவை நாங்கள் கட்டியெழுப்ப விரும்புகிறோம். அவர்கள் எங்கள் அண்டை நாடு. அவர்களுடன் எங்களுக்கு எந்த அடிப்படை பிரச்னையும் இருக்க விரும்பவில்லை.
ஆனால் சில பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் வங்கதேசத்தை மிகவும் பதட்டமாகவும், மிக கோபமாகவும் ஆக்குகிறது. இந்தக் கோபத்தைக் கடக்க நாங்கள் முயற்சிக்கிறோம். நாம் அமைதியாக இருக்க முயற்சித்தாலும், திடீரென்று அவர்கள் ஏதாவது சொல்கிறார்கள், ஏதாவது செய்கிறார்கள், கோபம் மீண்டும் வருகிறது என முகமது யூனுஸ் கூறினார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு நறுக்குனு நாலு கேள்வி.. ஜெய்ராம் ரமேஷ் எழுப்பிய விவாதம்.. சிக்கலில் பாஜக..