ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கில் வெளியான ஆவணங்கள் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவில் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளியான எப்ஸ்டீன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது வழக்கு தொடர்பான 35 லட்சம் பக்கங்கள் கொண்ட கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது. இதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
எப்ஸ்டீன் தனக்குத்தானே அனுப்பிய 2013-ஆம் ஆண்டு மின்னஞ்சலில், பில்கேட்ஸ் ரஷ்ய பெண்ணுடன் உறவு வைத்ததால் பால்வினை நோய் தொற்று ஏற்பட்டதாகவும், அதற்கான மருந்தை மெலிண்டா கேட்ஸுக்கு தெரியாமல் அனுப்புமாறு தன்னிடம் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மின்னஞ்சல் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய ஊடகத்துக்கு பேட்டியளித்த பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார். “எப்ஸ்டீனுடன் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்கும் வருந்துகிறேன். அவருடன் தொடர்பு கொண்டதற்கு மன்னிப்பு கோருகிறேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: நிதி மோசடி வழக்கு..! தேவநாதன் ஜாமின் மீண்டும் தள்ளுபடி..! ஹைகோர்ட் கறார்..!

2011-ல் முதல்முறையாக எப்ஸ்டீனை சந்தித்ததாகவும், அதன்பிறகு மூன்று ஆண்டுகளில் சில முறை இரவு விருந்தில் கலந்துகொண்டதாகவும் தெரிவித்தார். ஆனால் எப்ஸ்டீனின் கரீபியன் தீவுக்கு சென்றதில்லை, பெண்களுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ளவில்லை என்றும் வலியுறுத்தினார்.
அந்த மின்னஞ்சல் போலியானது என்றும், எப்ஸ்டீன் தன்னை தாக்கும் நோக்கத்தில் அனுப்பியிருக்கலாம் என்றும் பில்கேட்ஸ் கூறினார். அவரது முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் இதுகுறித்து அமெரிக்க ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “எப்ஸ்டீன் கோப்புகள் என் திருமண வாழ்க்கையின் வேதனையான நினைவுகளை திரும்ப கொண்டு வந்தது. இதற்கு பதில் சொல்ல வேண்டியவர் என் முன்னாள் கணவர் தான்” என்று தெரிவித்தார். இருவரும் 2021-ல் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
எப்ஸ்டீன் கோப்புகளில் டொனால்ட் டிரம்ப், பிரின்ஸ் ஆண்ட்ரூ உள்ளிட்ட பல பிரபலங்கள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த ஆவணங்கள் வெளியாவதால் உலக அளவில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. பில்கேட்ஸ் இப்போது தனது தொடர்பை மறுத்து வருந்தியுள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: சசி தரூர் மகனின் சீட்டை கிழித்த வாஷிங்டன் போஸ்ட்..!! 300 பேர் டிஸ்மிஸ்..!! நஷ்ட கணக்கு காட்டும் பத்திரிகை..!!