பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, நம் முப்படைகள் தாக்குதல் நடத்தின. இதில், 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நாம் நடத்திய சண்டை பற்றி விளக்கவும், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு போக்கு குறித்தும் சர்வதேச நாடுகளிடையே விளக்க, நம் நாட்டின் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், 4 நாள் போர் பற்றி விளக்கம் அளிக்கவும், பயங்கரவாதிகளை வளர்க்கும் பாகிஸ்தானின் முகத்திரையை கிழிக்கவும் அனைத்து கட்சி எம்பிகள் அடங்கிய 7 குழுக்களை 33 நாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான அனைத்து கட்சி குழு பனாமா, கயானா நாடுகளை தொடர்ந்து கொலம்பியாவுக்கு சென்றது.

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகள் முகாம்களை இந்தியா தாக்கி அழித்த போது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடந்ததும் பாகிஸ்தானுக்காக கொலம்பியா இரங்கல் தெரிவித்து இருந்தது. கொலம்பியாவில் இறங்கியதும் இது பற்றி சசி தரூர் பகிரங்கமாக பேசினார். ‛பாகிஸ்தானில் கொல்லப்பட்டவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள். அவர்கள் தான் காஷ்மீரில் அப்பாவி மக்களை கொன்றது.
இதையும் படிங்க: இந்தியா - பாக்., மீண்டும் போரிட்டால்..! உலகிலேயே பெரிய ராணுவம் எங்ககிட்ட தான் இருக்கு! மிரட்டும் ட்ரம்ப்!!

பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு எதிராக போராடுபவர்களையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பது அழகல்ல. கொலம்பியாவின் இரங்கல் அறிக்கை கவலையை தந்தது என்று கூறினார்.அதன் பிறகு கொலம்பிய அதிகாரிகள் குழுவினருடன் நம் அனைத்து கட்சி குழுவினர் பேசினர். பஹல்காம் அட்டாக் மற்றும் அதன் பிறகு என்னவெல்லாம் நடந்தது என்பதை எடுத்து கூறினர்.இதையடுத்து பாகிஸ்தானுக்காக கொலம்பியா இரங்கல் சொன்ன அறிக்கையை வாபஸ் பெற்றுக்கொண்டது. இந்தியாவின் பாதிப்பை இப்போது முழுமையாக புரிந்து கொண்டோம் என்றும் சொன்னது.

இதுதொடர்பாக பேசிய கொலம்பியாவின் துணை அமைச்சர் ரோசா யோலண்டா, இப்போது நாங்கள் முழு தெளிவை பெற்று விட்டோம். காஷ்மீரில் என்ன நடந்தது என்பது பற்றிய உண்மை நிலையை அறிந்து கொண்டோம் என்றார்.இதைத்தொடர்ந்து கொலம்பியாவுக்கு சசி தரூர் நன்றி சொன்னார்.

‛இந்தியாவின் நிலைப்பாட்டை கொலம்பியா புரிந்து கொண்டது. ஆபரேஷன் சிந்தூர் பற்றிய உண்மைகளை புரிந்து கொண்டு தங்கள் நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறது. நமக்கு உண்மையாக மதிப்பளித்து இதை கொலம்பியா செய்திருக்கிறது’ என்று சசி தரூர் சொன்னார். கொலம்பியாவின் இந்த நிலைப்பாடு பாகிஸ்தான் தலையில் இடியை இறக்கி இருக்கிறது. சசி தரூர் குழுவுக்கும் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைக்கும் கிடைத்த முக்கிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாத்ரூம் போக தண்ணியில்ல! இதுல இந்தியா கூட போர் ஒரு கேடா..! பாக்.-ஐ வறுத்தெடுத்த அந்நாட்டு நடிகை!