ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ள நிலையில், இந்தியாவில் 257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது ஒமைக்ரான் பிஏ.2.86திரிபான ஜேஎன்1 வகை கரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மக்கள்தொகை நெருக்கம் அதிகமுள்ள ஹாங்காங், சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முக்கிய நகரங்களில் சுகாதார துறையின் செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மக்கள் புதிதாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. குறிப்பாக ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்து 14,200 ஆக உள்ளது. தாய்லாந்தில் 30-39 வயதினரிடம் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை 33,030 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: தொடங்கியது அட்டாரி - வாகா எல்லை நிகழ்வு... பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டா?

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. மே 19ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 257 ஆக உள்ளது. இது மிகமிக குறைவான பாதிப்புதான் என்றும் இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்க அவசியம் இல்லை என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே பொதுமக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிவதுடன், சரியான தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விடைத்தாள் நகல்களுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? வெளியானது சிபிஎஸ்இ மாணவர்களுக்கான அறிவிப்பு!!