சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை தாக்கிய புயல் காரணமாக கடந்த 18 ஆம் தேதி அதிகனமழை பெய்துள்ளது. குறிப்பாக ஹுவாய்ஜி மாநகரப் பகுதிகளில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சுய்ஜியாங் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஹுவாய்ஜி நகரப் பகுதிக்குள் புகுந்த தண்ணீர் சாலைகளை வாய்க்கால்களைப் போன்று மாறியது.

இந்த வெள்ளப்பெருக்கால் குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் முதல் மாடி வரை நீரில் மூழ்கடிப்பட்டது. இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் இருந்து இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நீலகிரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை... காரணம் இதுதானாம்; வெளியான முக்கிய அறிவிப்பு!!

அவர்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அரசு வழங்கி வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்த புயல் காரணமாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழை தொடருவதால், பல மாகாணங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, தெற்கு சீனாவின் குவாங்சி பகுதியில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தெற்கு சீனாவில் பாதிக்கப்பட்ட பல்வேறு நகரங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மீட்புக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ப்பா செம்ம கிளைமேட்... சென்னையில் வெளுத்து வாங்குது மழை!