அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவரை அவரவர் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரப்படுத்தி வருகிறார். அதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டிரம்புக்கு எதிராக வெடித்த போராட்டம் வன்முறையாக மாறியிருக்கிறது. இந்த பரபரப்பான சூழலில், நியூ ஜெர்ஸியில் உள்ள நெவார்க் விமான நிலையத்தில், இந்திய மாணவருக்கு நடந்த கொடூர சம்பவம் இந்தியர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
அந்த மாணவரை போலீஸ் அதிகாரிகள் கைவிலங்கிட்டு, தரையில் தள்ளி முதுகில் மிதித்து கை, கால்களை கட்டி சித்ரவதை செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் உள்ள இந்தியர்களை சீற்றமடைய வைத்துள்ளது.

இந்த சம்பவம் உடனடியாக, அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரத்தின் கவனத்துக்கு போனது. இது தொடர்பாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நெவார்க் லிபர்ட்டி ஏர்போர்ட்டில் ஒரு இந்தியர் சிரமங்களை சந்தித்ததாக வெளியான வீடியோக்களை பார்த்தோம். இந்த விஷயத்தில் உள்ளூர் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இந்திய குடிமக்களின் நலனை காப்பதில் தூதரகம் எப்போதும் உறுதியாக உள்ளது" என இந்திய தூதரகம் தெரிவித்தது. மாணவனுக்கு நடந்த கொடுமையை குணால் ஜெயின் என்ற என்ஆர்ஐ தொழிலதிபர் நேரில் பார்த்தார். அதை வீடியோவும் எடுத்தார்.
இதையும் படிங்க: மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. 7 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு.. பீதியில் மக்கள்..!

அவர் கூறியதாவது: 7 ம்தேதி இரவு நெவார்க் விமான நிலையத்தில் இருந்து இந்தியா செல்லவிருந்தேன். அப்போது அதே விமானத்தில் வருவதாக இருந்த ஒரு இந்திய மாணவர் இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனையின் போது முன்னுக்குப்பின் முரணாக பேசி மாட்டிக் கொண்டார். அவர் அரியானாவைச் சேர்ந்தவர் என நினைக்கிறேன்.
அங்கு பேசப்படும் இந்தியில் கத்திக் கொண்டிருந்தார். நான் பைத்தியம் இல்லை, இவர்கள் என்னை பைத்தியமாக்க பார்க்கிறார்கள் என இளைஞர் கத்திக் கொண்டிருந்தார்.
உடனே மாணவனை வாயை மூடு என்று அதிகாரிகள் மிரட்டினர். அதிகாரிகள் பேசுவது மாணவனுக்கு புரியவில்லை. மாணவன் பேசுவது அதிகாரிகளுக்கு புரியவில்லை. அதைப் பார்த்த நான் ஒரு போலீஸ் அதிகாரியிடம் அவர் என்ன சொல்ல வருகிறார் என நான் கேட்டு சொல்லவா? என கேட்டேன். அதை அதிகாரிகள் ஏற்காமல் கூடுதலாக போலீசாரை வரவழைத்தனர்.அதன் பிறகுதான் அவரை கீழே தள்ளி குற்றவாளியைப் போல நடத்தினர். ஏழெட்டு போலீசார் வந்து மாணவரின் கால்களையும் கைகளையும் கட்டி கீழே தள்ளி முதுகில் மிதித்தனர். அதைப் பார்த்து எனக்கு ஏறக்குறைய அழுகையே வந்து விட்டது.
அமெரிக்காவில் ஒரு இந்தியனுக்கு நடந்த கொடுமை என் மனதை மிகவும் பாதித்து விட்டது. அந்த மாணவர் எந்த ஒரு தவறையும் செய்ததாக தெரியவில்லை. விசா இல்லாமல் ஏர்போர்ட்டுக்கு வந்திருக்க மாட்டார். அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்காது என நினைக்கிறேன். அதனால், ஏர்போர்ட் என்ட்ரி பகுதியில் குழம்பிப்போய் இங்குமங்கும் சுற்றி திரிந்திருக்கலாம்.

அதனால் அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்து விசாரித்தபோது, அவர் சரிவர பதில் சொல்லியிருக்க மாட்டார். ஆகவே, அவரை போலீஸ் அதிகாரிகள் டெரரிஸ்ட் போல நடத்தியுள்ளனர் என நினைக்கிறேன் என குணால் ஜெயின் கூறினார்.
இந்த வீடியோவை குணால் ஜெயின் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் டேக் செய்துள்ளார். என்னுடன்தான் அவர் விமானத்தில் வரவிருந்தார். ஆனால், அவர் விமான பயணத்தை போலீசார் தடை செய்து விட்டனர். அவர் இந்தியாவுக்கு திரும்பி விட்டாரா? என தகவல் இல்லை. அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்பதை விசாரித்து இந்தியாவிலுள்ள பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும் என ஜெய்சங்கருக்கு குணால் ஜெயின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 1000க்கு மேற்பட்ட இந்தியர்களை டிரம்ப் 2வது முறை அதிபரானதும் இந்தியாவுக்கு நாடு கடத்தினார். அப்போது அவர்களது கை, கால்களில் விலங்கிடப்பட்டு அவர்கள் நடத்தப்பட்ட விதம் இந்தியாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தை நினைவுப்படுத்தும்விதமாக, நெவார்க் விமான நிலைய சம்பவம் நடந்திருப்பதாக இந்தியர்கள் பலரும் வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பயங்கரவாதத்தை ஒழிக்கும் வரை சிந்து நதி பேச்சுக்கே இடமில்லை.. பாகிஸ்தானுக்கு இந்தியா கறார் பதில்..!