காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலக்கு பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. இரவோடு இரவாக போர் விமானங்களை அனுப்பி, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகளின் 9 முகாம்களை குண்டு வீசி தகர்த்தது. இதனை அடுத்து, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாக்., ராணுவம் போரில் இறங்கியது.
நம் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லையோர நகரங்களை குறி வைத்து நுாற்றுக்கணக்கான ட்ரோன்களை வீசியது. அனைத்தையும் நம் பாதுகாப்பு படையினர் தடுத்து அழித்தனர். அடுத்தடுத்து ட்ரோன்கள், ஏவுகணைகளை பாக்., வீசியதால், அடுத்தகட்ட நடவடிக்கையில் நம் விமானப்படை இறங்கியது.

சென்ற 10ம் தேதி காலை பாக்., விமானப்படை தளங்களை குறி வைத்து அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. அன்று மதியமே அலறியடித்துக் கொண்டு போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் ஓடி வந்தது. பாக்.,கின் இந்த திடீர் ஞானோதயத்தின் பின்னணியில், மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியத்தை நம் விமானப்படை அளித்தது தற்போது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: தீவிரவாதி மசூத் அசாருக்கு ரூ.14 கோடி வழங்கும் பாக். அரசு.. இந்திய தாக்குதல் உயிரிழப்புக்கு நிவாரணமாம்.!
பாக்., தலைநகர் இஸ்லாமாபாத் அருகே ராவல்பிண்டியின் நுார் கான் விமானப்படை தளத்தை நம் விமானப்படை ஏவுகணையால் தாக்கியபோது 435 மீட்டர் தொலைவில் அந்நாட்டின் வி.வி.ஐ.பி., விமானம் ஒன்று இருந்துள்ளது. இதற்கான செயற்கைக் கோள் புகைப்படங்கள் இப்போது வெளியாகி உள்ளன. அதில் பல ‘பகீர்’ உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

ராவல்பிண்டியில் உள்ள நுார் கான் விமானப்படை தளம் வெறும் போர் விமானங்களுக்கு மட்டுமானது அல்ல.
தலைநகர் இஸ்லாமாபாதுக்கு அருகில் இருப்பதால், அதிபர், பிரதமர், ராணுவ தலைமை தளபதி, வெளியுறவு அமைச்சர் என மிக முக்கிய பிரமுகர்களின் விமானப் பயணத்துக்கும் முக்கிய மையமாக உள்ளது.
இதனால் அங்கு அதி நவீன ரேடார் கண்காணிப்பு மற்றும் அதி நவீன கட்டுப்பாடு, கட்டளை அமைப்புகள் உண்டு. பாக்.,கில், மிக முக்கிய பிரமுகர்களுக்காக ‘ஜி 450 ஜி 4 எக்ஸ்’ என்ற வகை வெள்ளை நிற விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விமானங்கள் அங்கு மூன்று உள்ளன.

மே 10 தாக்குதலின் போது வி.வி.ஐ.பி. விமானம் ஒன்று இருந்ததை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன. நுாலிழையில் அது தப்பி உள்ளது. அந்த விமானத்தின் நீளம், வால், வடிவம், பின்புற இன்ஜின்கள் பாக்.,கின் வி.வி.ஐ.பி.,க்கள் பயன்படுத்தும் விமானம் என்பதை உறுதி செய்கிறது. பாக்., ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் பயன்படுத்தும் விமானம் போல் தெரிகிறது.
சிக்கியது வி.வி.ஐ.பி., விமானம் தான் என உறுதிப்படுத்தும் வகையில், அதே போன்ற விமானத்தின் அடுத்தடுத்த பயணங்கள் தொடர்பான படங்கள் உள்ளன. தாக்குதலில், ரேடார் கண்காணிப்பு, கட்டளை அமைப்புகள் அனைத்தையும் நம் படையினர் தகர்த்து விட்டனர் என்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

இதுபோல அந்த தளத்தில் இருந்த விமான எரிபொருள் நிரப்பும் டேங்கரும் தாக்குதலுக்கு பின் காணப்படவில்லை. தாக்குதல் துவங்கி நான்கு நாட்களிலேயே போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் அவசரப்பட்டதற்கு இந்த செயற்கைக் கோள் படங்களே சான்றாக உள்ளன. போரை நிறுத்தாவிட்டால், தலைநகர் அருகிலேயே நடத்தப்பட்ட தாக்குதலின் இலக்கு, பாக்.,கின் உயர்ந்த தலைமையை நோக்கியும் திரும்பி இருக்கும் என்ற மரண பயத்தை அந்நாட்டுக்கு நம் படையினர் காட்டி உள்ளனர். இதனால் தான் அமெரிக்காவின் உதவியையும் பாக்., நாடியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!