மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. கடந்த இரவு முதல் இரு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த மோதல் மேலும் மோசமடையும் சூழல் உருவாகியிருந்தது.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொண்டு வந்த தற்போதைய தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஈரான் அறிவித்துள்ளது. இருப்பினும், லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்கு இன்னும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மோதல் குறித்து உலக நாடுகள் கடும் கவலையுடன் கண்காணித்து வந்தன. ஏற்கனவே நடைபெற்று வந்த அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் கேள்விக்குறியாகியிருந்த சூழலில், தாக்குதல்களை நிறுத்தும் இந்த முடிவை ஈரான் அரசு எடுத்துள்ளது.
இதையும் படிங்க: போர் பதற்றம் உச்சம்.. ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரம்..!! இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு..!!
அதே நேரத்தில், லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், தாங்களும் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்றும், இது இஸ்ரேலுக்கு விடுக்கப்படும் தெளிவான எச்சரிக்கை என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
கடந்த இரவு முதல் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், முக்கிய கட்டமைப்புகள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதனால் இரு தரப்பிலும் குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
ஈரான் தரப்பில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவதாகவும், தற்போதைய தாக்குதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும் ஈரான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: செங்கடலில் இஸ்ரேலிய கப்பல் போக்குவரத்துக்கு தடை..!! ஹவுதி அமைப்பின் புதிய எச்சரிக்கை..!!