அமெரிக்கா முன்வைத்ததாக கூறப்படும் 15 அம்சங்களைக் கொண்ட அமைதி திட்டத்திற்கு, ஈரான் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்படாத நிலையில், மாற்றாக கடுமையான நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்காசியப் பிராந்தியத்தில் நீடித்து வரும் போர் பதற்றத்தின் பின்னணியில் இந்த தகவல் உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிபந்தனைகளின் மையமாக, அமெரிக்காவின் ராணுவப் பங்களிப்பை குறைப்பதே முக்கிய நோக்கமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேற்காசிய நாடுகளில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ தளங்களும் அகற்றப்பட வேண்டும் என்பதே ஈரானின் முதன்மை கோரிக்கையாகும். இதுவே அந்தப் பகுதியில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சமீபத்தில் ஈரானின் உட்கட்டமைப்புகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நிதி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம், போரால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை சரிசெய்ய ஈரான் முயற்சித்து வருகிறது.
இதையும் படிங்க: துபாய் ஏர்போர்ட்டில் மீண்டும் ட்ரோன் தாக்குதல்!! ஈரான் தாக்குதலில் இந்தியர் உட்பட 4 பேர் காயம்!

அதேபோல், உலக எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பாதையாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சுங்கவரி விதிக்கும் அதிகாரமும் ஈரான் கோரியுள்ளது. எகிப்தின் சூயஸ் கால்வாயில் விதிக்கப்படும் சுங்கவரியைப் போல, இந்த வரி வசூல் ஈரானின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையில், லெபனானில் செயல்படும் ஹெஸ்பொல்லா அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதும் ஈரானின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும். பிராந்தியத்தில் பதற்றத்தை குறைக்கும் நோக்கில் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.
அணுசக்தி திட்டம் தொடர்பாக சர்வதேச ஆய்வுகளை அனுமதிக்கத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளதாலும், ஏவுகணை திட்டங்களை கட்டுப்படுத்த அமெரிக்கா விதிக்கும் எந்தவித நிபந்தனைகளையும் ஏற்க முடியாது என தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த கடுமையான நிபந்தனைகள், அமெரிக்கா முன்வைத்த அமைதி முயற்சிகளுக்கு பெரிய சவாலாக பார்க்கப்படுகின்றன. எதிர்காலத்தில் இந்த பேச்சுவார்த்தைகள் எந்த திசையில் நகரும் என்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: இரக்கம் காட்டாத ஈரான்!! பலமான பதில் தாக்குதல்!! அமெரிக்க வீரர்கள் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு!