அமெரிக்கா அறிவித்த அமைதி முயற்சிகளுக்கு ஈரான் நேரடியாக மறுப்பு தெரிவித்துள்ளதால், மேற்காசியாவில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்றும், அமெரிக்காவிடம் போரை நிறுத்துமாறு ஈரான் எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை என்றும் அந்நாட்டு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த மோதலின் பின்னணியில், உலகின் முக்கிய கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் சர்வதேச எண்ணெய் சந்தையில் தாக்கம் ஏற்பட்டது. பல நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்ததுடன், விநியோகத்திலும் சிக்கல்கள் ஏற்பட்டன.
சமீபத்தில், ஈரான் மீது திட்டமிடப்பட்ட புதிய ராணுவ தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். மேலும், ஈரானின் அணு ஆயுத திட்டம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய அமைதி ஒப்பந்த வரைவு தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: ஈரானுடன் இன்று நள்ளிரவு மீண்டும் பேச்சுவார்த்தை! போர் நிறுத்தத்தில் முக்கிய திருப்பம்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

உலக நாடுகளின் நலனையும், பிராந்திய அமைதியையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், அமெரிக்காவின் அமைதி முயற்சிக்கு இஸ்ரேலும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆனால், டிரம்பின் இந்தக் கருத்துகளை ஈரான் உடனடியாக மறுத்துள்ளது. அமெரிக்காவுடன் எந்த புதிய ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்றும், ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்து எந்த உடன்பாடும் இல்லை என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடரும் வரை ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாது என்றும், போரை நிறுத்துமாறு ஈரான் வேண்டுகோள் விடுத்ததாக டிரம்ப் கூறியது உண்மையல்ல என்றும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. எந்தவிதமான ராணுவ நடவடிக்கையையும் எதிர்கொள்ள ஈரானிய பாதுகாப்புப் படைகள் முழுமையாக தயாராக உள்ளதாகவும் அந்நாட்டு தரப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பில் வெளியாகும் முரண்பட்ட தகவல்களால், மேற்காசிய அரசியல் சூழல் மீண்டும் பதற்றமடைந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான நிலைமை உலகளாவிய எண்ணெய் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த விவகாரத்தை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: டிரம்ப் முகத்தில் கரியை பூசிய ஈரான்... உலகையே ஸ்டன் ஆக்கிய முக்கிய அறிவிப்பு... அடங்காத அமெரிக்கா...!