ஈரான் மீது தாக்குதல் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதலில் ஹமாஸின் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹமாஸுக்கு ஆதரவாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். அந்த அமைப்புகளை குறிவைத்தும் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில், ஈரானின் அணுசக்தி உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க அரசு கடந்த சில நாள்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் இதுவரை ஈரானுடன் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து எந்த நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் எனக் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உற்பத்தி தளம், அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும், ஈரானின் ராணுவ முகாம்கள் மீது கடுமையான தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்புப் படை நடத்தியுள்ளது. அந்நாட்டு அரசு தொலைக்காட்சி, குண்டுவெடிப்பை உறுதி செய்துள்ளது.
இதையும் படிங்க: கிரேட்டா தன்பர்க்-க்கு ஒரே ஒரு அட்வைஸ்.. தனது ஸ்டைலில் தெறிக்க விட்ட ட்ரம்ப்..!

ஈரானின் தெஹ்ரானில் மக்கள் குண்டுவெடிப்பு சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர். இந்த தாக்குதலில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹொசைன் சலாமி உயிரிழந்திருப்பதாக முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் பல ராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகம் கூறி இருக்கிறது. இந்த சூழலில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: ஈரானில் 'Operation Rising Lion என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. இஸ்ரேலின் உயிர்வாழ்விற்காக ஈரானிய அச்சுறுத்தலை முறியடிக்க, ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தலை நீக்க, இந்த தாக்குதல் நடவடிக்கை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும். எங்கள் துணிச்சலான விமானிகள் ஈரான் முழுவதும் உள்ள இலக்குகளை தாக்குகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில், 9 அணுகுண்டுகளை உருவாக்குவதற்கான பதப்படுத்தப்பட்ட யுரேனியத்தை ஈரான் தயாரித்து விட்டது. அதைக் கொண்டு அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக ஈரான் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் மிகக் குறுகிய காலத்தில் அணுகுண்டுகளை ஈரான் உருவாக்கிவிடும் அபாயம் உள்ளது. இது, இஸ்ரேல் நாட்டுக்கான மிகப்பெரிய அச்சுறுத்தல். எங்கள் நாட்டை அழிப்பதாக கூறுபவர்கள், அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்வதை இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது.

அந்த நோக்கத்துடன் தான் ஈரான் நாட்டின் அணு ஆயுத உற்பத்தி மையங்கள் மீது தாக்குதலை துவக்கி உள்ளோம். கடந்தாண்டு ஈரான் இஸ்ரேல் மீது 300 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஒவ்வொரு ஏவுகணையும் ஒரு டன் எடையிலான வெடி பொருட்களை கொண்டதாக இருந்தது. வரும் காலத்தில் இந்த ஏவுகணைகள் அனைத்தும் அணு ஆயுதங்களை ஏந்தி வந்து இஸ்ரேலை தாக்கும் நிலை ஏற்படும்.
அதுபோன்ற பத்தாயிரம் ஏவுகணைகளை உருவாக்கும் திட்டத்தை ஈரான் செயல்படுத்தி வருகிறது. மூன்று ஆண்டுகளில் ஈரான் இந்த நிலையை எட்டிவிடும். இந்த நிலையை தடுத்து நிறுத்தி ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இஸ்ரேல் இப்போது தாக்குதலை தொடங்கியுள்ளது. இப்போது செயல்படவில்லை எனில் நாங்கள் இங்கே இருக்கமாட்டோம் என நெதன்யாகு எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: ஹமாஸ் தலைவரை போட்டுத்தள்ளியது இப்படித்தான்! ஸ்கெட்ச் போட்டதை விவரிக்கும் இஸ்ரேல்..!