ஈரானின் அணுசக்தி தளங்கள், ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணி அளவில் திடீர் தாக்குதல் நடத்தியது. 200-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மூலம் ஈரான் முழுவதும் குண்டுகள் வீசப்பட்டன.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி மையம், இஸ்ஃபகான் நகரில் உள்ள அணுசக்தி தொழில்நுட்ப மையம், மர்காஸி மாகாணம் அராக் நகரில் உள்ள கனநீர் அணு உலை மையம் ஆகியவையும் இஸ்ரேலின் தாக்குதலில் தகர்த்து அழிக்கப்பட்டன.
இந்த தாக்குதலில், ஈரானின் மூத்த அணுசக்தி விஞ்ஞானிகள் அப்துல் ஹமீது, அகமதுரசா, சையது அமீர் உசைன், மோட்லாபிசாடே, முகமது மெஹதி, அப்பாஸி ஆகிய 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது, ஈரானின் அணு ஆயுத திட்டத்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: இஸ்ரேல் வீசிய ஏவுகணை.. டெஹ்ரானில் தகதகவென பற்றி எரியும் எண்ணெய் கிடங்குகள்..!

இஸ்ரேலின் 2-வது தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி முகமது பகேரி, இஸ்லாமிக் புரட்சி காவல் படையின் தளபதி உசைன் சலாமி, கதம் அல் அன்பியா என்ற ஈரான் போர் கட்டளை தலைமையகத்தின் தளபதி கோலாம் அலி ரஷீத் ஆகியோர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் நடத்திய ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற வான்வழித் தாக்குதலில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 படுகாயமடைந்ததாகவும் ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்தார். இந்நிலையில் இதற்கு பதிலடியாக நேற்று காலை வரை, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என்ற பெயரில் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஏவுகணைகளை ஏவியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டு, 34 பேர் காயமடைந்தனர்.
ரிஷோன் லெசியோனில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு 19 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை வரையிலும் இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவ அமைச்சர் காட்ஸ் நேற்று அளித்த பேட்டியில், “இஸ்ரேலின் குடியிருப்பு பகுதிகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசினால், ஈரான் தலைநகர் டெஹ்ரானை அழிப்போம். ஈரான் சர்வாதிகாரி அயதுல்லா அலி கமேனி அந்த நிலையை உருவாக்க நினைக்கிறார். இஸ்ரேல் இதுவரை ஈரானிய அணுசக்தி மற்றும் ராணுவ தளங்களை மட்டுமே தாக்கியுள்ளது என்றார்.
மேலும் இருவர் பலிஈரான் மீது இஸ்ரேல் நேற்று அதிகாலை மீண்டும் நடத்திய தாக்குதலில், உளவுப்பிரிவு துணைத் தலைவர் ஜெனரல் கோலம்ரேசா மெஹ்ராபி, ராணுவ செயல்பாடுகளுக்கான துணைத் தலைவர் ஜெனரல் மெஹ்தி ரப்பானி ஆகியோர் கொல்லப்பட்டனர்.இஸ்ரேல் தாக்குதலில் அணுசக்தி நிலையங்கள் சேதமடைந்ததை ஈரான் அந்நாட்டு அணுசக்தி முகமையின் செய்தித் தொடர்பாளர் பெஹ்ரோஸ் உறுதிப்படுத்தினார்.


இருப்பினும் முன் கூட்டியே முக்கிய சாதனங்கள் மற்றும் பொருட்களை இடம் மாற்றியதாக தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களும், ஈரானின் பதிலடி நடவடிக்கையும் இரு நாடுகளின் தலைநகரங்களும் நாசமாகும் ஆபத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: 2000 ட்ரோன்கள் தாக்கும் - மிரட்டும் ஈரான்.. தெஹ்ரான் பற்றி எரியும் - எச்சரிக்கும் இஸ்ரேல்..!