மேற்கு ஆசிய நாடுகளான ஈரானும், இஸ்ரேலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது, இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மீது பல வான்வழி தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலின் "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம் ஈரானின் அணு ஆயுதத் திறனை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இலக்கு வைத்து நடத்தப்பட்டவை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இதற்கு பதிலடியாக, ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மீது நிச்சயம் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் தரப்பில் கூறப்பட்டது. தற்போது ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது ட்ரோன்களை ஏவியது ஈரான். ஈரானிய நீர்மூழ்கிக் கப்பல் இஸ்ரேலிய பிரதேசங்களை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஐந்து தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: 2000 ட்ரோன்கள் தாக்கும் - மிரட்டும் ஈரான்.. தெஹ்ரான் பற்றி எரியும் - எச்சரிக்கும் இஸ்ரேல்..!

அதிரடியாக தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்த ஈரான் மீது முன்கூட்டியே இஸ்ரேல் தாக்குதலை தொடங்கிய நிலையில், அணு உலைகள் ராணுவ தளங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து தாக்கியது. இதில் ஈரானிய புரட்சி படையின் தளபதி உசைன் சரோமி உட்பட 78 பேர் பலியானதாகவும் 320 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலாக தான் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியது.

பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேலின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறிப்பாக ஜெருசலேம், டெல் அவிவ் போன்ற நகரங்களில் நடந்த தாக்குதலில் பெரும் சேதம் விளைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பகுதிகளில் ஏராளமான கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்து உள்ளன.

இஸ்ரேலும், ஈரானும் தங்கள் தாக்குதலை தொடர்வதில் உறுதியாக இருப்பதால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இரண்டு முக்கிய எண்ணெய்க் கிடங்குகள் பற்றி எரிந்து வருவதாக ஈரானிய எண்ணெய் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஈரானிய எண்ணெய் அமைச்சகத்தின் தகவல்படி, டெஹ்ரானின் வடமேற்கே உள்ள ஷாஹ்ரானில் உள்ள எண்ணெய் கிடங்குகளும், நகரத்திற்கு தெற்கே உள்ள மற்றொன்றும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்கா-ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓமனில் நடைபெறுவதாக இருந்த நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் சூழலில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அடங்கமறுக்கும் இஸ்ரேல்.. தலைதூக்க முடியாமல் திணறும் காசா.. இன்று 16 பேர் பலி..!