ஈரானின் அணுசக்தி தளங்கள், ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீர் தாக்குதல் நடத்தியது. 200-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மூலம் ஈரான் முழுவதும் குண்டுகள் வீசப்பட்டன.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி மையம், இஸ்ஃபகான் நகரில் உள்ள அணுசக்தி தொழில்நுட்ப மையம், மர்காஸி மாகாணம் அராக் நகரில் உள்ள கனநீர் அணு உலை மையம் ஆகியவையும் இஸ்ரேலின் தாக்குதலில் தகர்த்து அழிக்கப்பட்டன.
இந்த தாக்குதலில், ஈரானின் மூத்த அணுசக்தி விஞ்ஞானிகள் அப்துல் ஹமீது, அகமதுரசா, சையது அமீர் உசைன், மோட்லாபிசாடே, முகமது மெஹதி, அப்பாஸி ஆகிய 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது, ஈரானின் அணு ஆயுத திட்டத்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: அடங்கமறுக்கும் இஸ்ரேல்.. தலைதூக்க முடியாமல் திணறும் காசா.. இன்று 16 பேர் பலி..!

இஸ்ரேலின் 2-வது தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி முகமது பகேரி, இஸ்லாமிக் புரட்சி காவல் படையின் தளபதி உசைன் சலாமி, கதம் அல் அன்பியா என்ற ஈரான் போர் கட்டளை தலைமையகத்தின் தளபதி கோலாம் அலி ரஷீத் ஆகியோர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் நடத்திய ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற வான்வழித் தாக்குதலில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 படுகாயமடைந்ததாகவும் ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்தார். இந்நிலையில் இதற்கு பதிலடியாக இன்று காலை வரை, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என்ற பெயரில் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஏவுகணைகளை ஏவியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டு, 34 பேர் காயமடைந்தனர்.

ரிஷோன் லெசியோனில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு 19 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை வரையிலும் இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
இந்நிலையில், எதிர்காலத்தில் தாக்குதல் மிக பயங்கரமாக இருக்கும் எனவும் அடுத்த முறை 2000 ஏவுகணைகளை ஒரேநேரத்தில் ஏவி தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் தாக்குதலை அடுத்து, பாதுகாப்பு கருதி இஸ்ரேலின் சர்வதேச பென் குரியன் விமானநிலையம் மூடப்பட்டது.

இது குறித்து பேசிய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், “ஈரானிய சர்வாதிகாரி தனது மக்களை அவர்கள் விரும்பாத ஒரு யதார்த்தத்துக்கு பிணைக் கைதிகளாக வைத்துள்ளார். இஸ்ரேலிய பொதுமக்கள் மீதான குற்றவியல் தாக்குதலுக்கு அவர்கள் பெரும் விலை கொடுப்பார்கள். அயதுல்லா அலி கமேனி இஸ்ரேலை நோக்கி மேலும் ஏவுகணைகளை வீசினால் தெஹ்ரான் எரியும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: தொடரும் போர்ப்பதற்றம்.. ஈரான் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு..!