ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை மையங்கள் மீது இஸ்ரேல் சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரானின் மூன்று முக்கிய படைத்தளபதிகள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். மிகப்பெரிய அணு ஆயுத தளம் பலத்த சேதம் அடைந்தது.
இதனால் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல்- ஈரான் ஆகிய இரு நாடுகளும் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டனர். கடைசி 45 ஆண்டுகளில் ஈரான் பார்த்திருக்காத கொடிய தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்க 100 ட்ரோன்களை ஈரான் ஏவியது. அதை இஸ்ரேல் போர் விமானங்கள் முறியடித்தன. தொடர்ந்து பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரான் மீது கொடிய தாக்குதலை நடத்தும் முன்பு இஸ்ரேல் பிரதமர் செய்த காரியம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இஸ்ரேல் மேல கையை வச்சா.. அடுத்த தாக்குதலுக்கு ஒன்னுமே இருக்காது.. ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்..!
தாக்குதல் நடப்பதற்கு முந்தைய நாளான வியாழக்கிழமை, ஜெருசலேம் நகரில் உள்ள வெஸ்டன் வால் என்று அழைக்கப்படும் பழமையான மேற்கு சுவரில் அவர் பிரார்த்தனை செய்ததும், அங்கு ரகசிய கடிதம் எழுதி வைத்ததும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன. மேற்கு சுவர் என்றால் என்ன; அங்கு எதற்காக நெதன்யாகு சென்றார்; அவர் அந்த ரகசிய கடிதத்தில் என்ன எழுதி இருந்தார் என்பதை பார்க்கலாம். ஜெருசலேமில் உள்ள மேற்கு சுவர் யூதர்களுக்கு மிகவும் புனிதமான இடம். ஜெருசலேமில் யூதர்கள் கட்டிய முதல் மற்றும் 2ம் கோயில்கள் எதிரி மன்னர்களால் இடிக்கப்பட்டன.இப்போது கோயிலின் ஒரு சுவர் மட்டுமே எஞ்சி இருக்கிறது. அது தான் மேற்கு சுவர் என்று யூத மக்கள் நம்புகின்றனர்.
இதனால் தான் அந்த இடத்தை புனிதமாகவும், பிரார்த்தனைக்கான இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். மேற்கு சுவருக்கு வரும் யூதர்கள் குறிப்பு எழுதி சுவர் இடுக்கில் வைத்து விட்டு பிரார்த்தனை செய்வது வழக்கம். அப்படி தான் ஈரானை தாக்கும் முன்பு மேற்கு சுவரில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பிரார்த்தனை செய்தார்.அப்போது அவர் ரகசிய குறிப்பும் எழுதி சுவர் இடுக்கில் வைத்தார்.

ஈரான் மீதான தாக்குதல் வெற்றிகரமாக முடிந்த நிலையில், அந்த ரகசிய குறிப்பில் நெதன்யாகு என்ன எழுதி இருந்தார் என்பதை இப்போது இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. நெதன்யாகு எழுதியது ஒரு பைபிள் வசனம். எண்ணாகமம் 23வது அதிகாரம் 24வது வசனத்தில் அது வருகிறது.
‛இதோ, ஒரு மக்களினம்; அது ஒரு பெண் சிங்கம் போன்று எழும்புகிறது; ஒரு சிங்கம் போன்று அது தன்னை உயர்த்துகிறது. இரையை விழுங்கி கொலையுண்டதின் இரத்தத்தைக் குடிக்கும் மட்டும் அது படுப்பதில்லை’ என்று தமிழ் பைபிளில் அந்த வசனம் இருக்கிறது. இதை தான் நெதன்யாகு எழுதி மேற்கு சுவர் இடுக்கில் வைத்திருக்கிறார். அதோடு இந்த பைபிள் வசனம் தொடர்பாகவே, இஸ்ரேல் நடத்திய ஆபரேஷனுக்கும் பெயர் வைத்திருக்கின்றனர். ‛ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்பது தான் ஈரானை தாக்க இஸ்ரேல் பயன்படுத்திய பெயர்.
இதையும் படிங்க: தாறுமாறாக உயரப்போகும் பெட்ரோல், டீசல் ரேட்! இஸ்ரேல் - ஈரான் சண்டையால் டாப் கியரில் கச்சா எண்ணெய்..!