அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஜூலை 8-ஆம் தேதி துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டை முடித்துத் திரும்பும்போது, ஈரானிய அச்சுறுத்தல் காரணமாக ரகசியமாக விமானத்தை மாற்றிப் பயணித்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் சீக்ரெட் சர்வீஸ் மற்றும் ராணுவ அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுகிறேன். அவர்கள் வேறு விமானத்தில் செல்லச் சொன்னார்கள். நான் அதன்படி செய்தேன். அச்சுறுத்தல் இருந்தது என்று நினைக்கிறேன். நான் அதிகம் கேட்கவில்லை. எனக்கு நிறைய அச்சுறுத்தல்கள் வருகின்றன,” என்று தெரிவித்தார்.
அமெரிக்க உளவுத்துறை தகவல்களின்படி, ஈரான் ஆதரவுப் படைகள் டிரம்ப்பை அல்லது அவரது விமானத்தை தோளில் வைத்து இயக்கும் ஏவுகணை மூலம் தாக்கத் திட்டமிட்டிருந்தன. அங்காராவில் நேட்டோ மாநாட்டு அருகே அத்தகைய ஏவுகணை வைத்திருந்த ஒருவர் காணப்பட்டதாகவும், டிரம்ப் தங்கியிருந்த இடத்தின் விவரங்கள் ஈரானியர்களுக்குத் தெரிந்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இதையும் படிங்க: உலக நலனுக்காக.. ஈரான் மீது திட்டமிட்ட ராணுவத் தாக்குதல் நிறுத்தம்..!! டிரம்ப் அதிரடி அறிவிப்பு..!!

டிரம்ப் கேமராக்கள் முன்னால் பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறினார். ஆனால் உடனடியாக அதன் மறுபுறக் கதவு வழியாக உணவுப்பொருட்களை ஏற்றும் கேட்டரிங் டிரக்கில் ஏறி, அருகில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய சி-32ஏ ராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டார். இந்த விமானம் “ரீச் 18” என்ற அழைப்புக் குறியீட்டில் பிரிட்டனுக்குப் பறந்தது. பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தனியாக அந்த விமானத்தில் ஏறினார்.
வெள்ளை மாளிகை பணியாளர்கள், செய்தியாளர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் உள்ளிட்டோர், டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒனில்தான் இருப்பதாக நம்பினர். ஜன்னல் திரைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டது. பிரிட்டன் சென்றதும் டிரம்ப் மீண்டும் ஏர் ஃபோர்ஸ் ஒனில் ஏறி இறங்கி, பின்னர் கத்தார் அரசு பரிசளித்த போயிங் 747-8 விமானத்தில் அமெரிக்கா திரும்பினார்.
இந்த ஏமாற்று நடவடிக்கையால் செய்தியாளர்கள் ஆபத்தில் தள்ளப்பட்டதாக அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சங்கம் கடும் கவலை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து முன்னரே தெரிவிக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம், அமெரிக்க-ஈரான் பதட்டத்தின் தீவிரத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது.
இதையும் படிங்க: 'Where to kill Melania?' ஈரான் வெளியிட்ட ஷாக் வீடியோ..!! டிரம்ப் குடும்பத்தை சுற்றும் புதிய சர்ச்சை!!