ஈரான் - அமெரிக்கா இடையேயான அமைதி பேச்சு இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் தொடங்கவிருந்த நிலையில், ஈரான் திடீர் நிபந்தனைகளை முன்வைத்து பேச்சை தாமதப்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் வெளியிட்ட அறிக்கையில், “லெபனான் மற்றும் ஹெஸ்பொல்லா மீதான இஸ்ரேல் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தாவிட்டால், அமெரிக்காவுடன் பேச்சு நடத்த முடியாது. லெபனானில் அமைதி ஏற்படாமல் அமைதி பேச்சுக்கு வர முடியாது” எனத் தெரிவித்தார்.
இதேபோல், சர்வதேச வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரான் சொத்துக்கள் மற்றும் நிதிகளை அமெரிக்கா உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதும் ஈரானின் மற்றொரு முக்கிய நிபந்தனையாகும். இந்த இரு நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்ட பிறகே அமெரிக்காவுடன் பேச்சு தொடங்க முடியும் என காலிபாப் உறுதியாகக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்!! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பாக்., பிரதமர்!!

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம், எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பின்னணியில், பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் இன்று நடைபெறவிருந்த அமைதி பேச்சு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் ஈரானின் இந்தப் புதிய நிபந்தனைகள் காரணமாக, இன்று பேச்சு தொடங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. லெபனான் போர் நிறுத்தம் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களின் விடுவிப்பு ஆகியவை நிறைவேற்றப்படாவிட்டால் பேச்சு நடைபெறாது என ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த விவகாரம் மேற்காசிய அமைதி முயற்சிகளுக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். பாகிஸ்தான் அரசு இந்த நிலைமையை சமாளித்து பேச்சை தொடங்க ஏதேனும் முயற்சி எடுக்குமா என்பது அடுத்த சில மணி நேரங்களில் தெரியவரும்.
இதையும் படிங்க: ஏப்., 7ல் போர் நிறுத்தம்!! பேச்சுவார்த்தைக்கு சம்மதம்!! அமெரிக்க, இஸ்ரேல் போரில் இறங்கி வரும் ஈரான்!!