கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நடவடிக்கை எடுக்க திமுக அரசு தயங்குவது ஏன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு பற்றி விளக்கம் அளித்த கோவை காவல் ஆணையர் சரவணசுந்தர், ஞாயிற்றுக் கிழமை இரவு 11:20 மணிக்கு காவல்துறைக்கு மாணவியின் நண்பர் தொடர்பு கொண்டு உதவி கோரியதாகவும், 11:35 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு தான் மாணவியைக் கண்டதாகவும், அதுவும் அம்மாணவி தானாக வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தார் என்று கூறியுள்ளார்.
இரவு 11:35 மணி முதல், அதிகாலை 4 மணி வரை, 4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்துகொண்டு இருந்தது காவல்துறை என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி என்று தெரிவித்தார். குற்றவாளிகளை பிடித்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பொம்மை முதல்வர் ஸ்டாலின் தனது கால்துறையால் சம்பவ இடத்தில் நின்றுக்கொண்டே நான்கரை மணி நேரம் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று தெரிவித்தார்
இதையும் படிங்க: கடிதம் மட்டும் போதுமா? நடவடிக்கை எடுங்க ஸ்டாலின் ஐயா... சீமான் வலியுறுத்தல்...!

100 போலீசார் இணைந்து பெரிய தேடுதல் வேட்டை நடத்தியதாக காவல் ஆணையர் சொல்கிறார் என்றும் நான்கரை மணி நேரம், 100 போலீசாரால் சம்பவ இடத்தில் இருந்த பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது எனவும் கூறினார். காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு மாணவி எப்படி சென்றார் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, சிறிய சுவர் ஒன்று இருந்தது; அதை தாண்டிச் சென்றதால் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற காவல் ஆணையர், சில நிமிடங்களில், மிகப்பெரிய சுவர் இருந்தது., அதை தாண்டிச் சென்று அந்த மாணவி இருந்தார் என தனது கருத்தை மாற்றினார் என்றும் சுட்டிக்காட்டினார்.
அங்கு இருந்தது சிறிய சுவரா., பெரிய சுவரா., ஏன் அதைத் தாண்டி காவல்துறை, அதுவும் 100 பேர் கொண்ட படை, சென்று தேடவில்லை என்று கேட்டுள்ளார். இருள் சூழ்ந்த தனிமையான இடம் என்பதால் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற விளக்கத்தை அளிக்கவே திமுக அரசின் காவல்துறை கூச்சப்பட வேண்டும் என்றும் நள்ளிரவில் ஒரு பெண்ணை சம்பவ இடத்தில் தேடிக் கண்டுபிடிக்க திமுக அரசின் காவல்துறைக்கு துப்பில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறதா திமுக அரசு என்றும் கேள்வி எழுப்பினார். குற்றவாளிகள் கைது, குற்றப் பத்திரிகை ஒரு மாதத்தில் தாக்கல் செய்து விடுவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பெருமை பேசுகிறார் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: கிள்ளி குடுக்க உங்க அப்பா வீட்டு பணமா ஸ்டாலின்? ஊக்கத் தொகையை உயர்த்த ஜெயக்குமார் வலியுறுத்தல்...!