பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியிழந்ததற்கு அமெரிக்கா நடத்திய சதிதான் காரணம் என அவர் முன்பே குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் அதிர்ச்சி ரகசிய தூதரக ஆவணம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆவணம் சர்வதேச அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2018 ஆகஸ்ட் முதல் 2022 ஏப்ரல் வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான், உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை முரண்பாடுகள் காரணமாக நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போதே அமெரிக்க சதி என்று குற்றம் சாட்டிய இம்ரான் கானின் கூற்றை இப்போது புதிய ஆவணம் வலுப்படுத்தியுள்ளது.
‘டிராப் சைட் நியூஸ்’ என்ற புலனாய்வு ஊடகம் வெளியிட்டுள்ள இந்த ரகசிய ஆவணத்தின்படி, 2022-ல் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஆசாத் மஜீத் கானுக்கும், அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி டொனால்ட் லு-வுக்கும் இடையே ரகசிய சந்திப்பு நடைபெற்றது.
இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் போரால் கடுமையான பொருளாதார பின்னடைவு!! புலம்பித் தள்ளும் பாக்., பிரதமர்!!

அந்த சந்திப்பில், இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றால் அனைத்தும் மன்னிக்கப்படும் என்றும், தோல்வியில் முடிந்தால் பாகிஸ்தானுக்கு மிகக் கடினமான காலம் வரும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் தனிமைப்படுத்தப்படும் என்றும் டொனால்ட் லு எச்சரித்ததாக ஆவணம் தெரிவிக்கிறது.
இம்ரான் கான் அரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல விவகாரங்களில் மோதல் இருந்ததே இந்த ஆட்சி கவிழ்ப்புக்கு முக்கிய காரணம் என டிராப் சைட் நியூஸ் தெரிவித்துள்ளது. இந்த ஆவணம் வெளியானதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இம்ரான் கான் தரப்பினர் இதை வரவேற்றுள்ள நிலையில், தற்போதைய பாகிஸ்தான் அரசு இந்த விவகாரத்தில் இதுவரை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.
இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி, இந்த ஆவணத்தை ஆதாரமாகக் கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் பாகிஸ்தான்-அமெரிக்க உறவுகளை மீண்டும் பாதிக்கும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி! ஜூலை 17 முதல் ஆன்லைன் சுய விபரப் பதிவு! 16 மொழிகள் அனுமதி!