பாரிஸ்: பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேகியா நாடுகளுக்கான தனது வெளிநாட்டு பயணத்தின் இறுதிக்கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸை சென்றடைந்தார். அங்கு இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிறகு, பிரான்சின் எவியான்-லெஸ்-பெய்ன்ஸ் நகரிலிருந்து பாரிஸுக்கு வந்த பிரதமர் மோடியை, இந்திய சமூகத்தினர் பாரம்பரிய முறையில் வரவேற்றனர். பலர் இந்திய தேசியக் கொடிகளை ஏந்தி அவரை வரவேற்றதுடன், இந்தியா-பிரான்ஸ் நட்புறவையும் வலியுறுத்தினர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பதிவில், பாரிஸில் கிடைத்த அன்பான வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான உறவை வலுப்படுத்த இந்திய வம்சாவளியினர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றும் அவர் குறிப்பிட்டார். உலக முன்னேற்றத்திற்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மை முக்கிய பங்காற்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு சர்ப்ரைஸ்! ஸ்லோவாக்கியப் பள்ளி மாணவர்கள் அசத்தல்!

பாரிஸில் நடைபெறும் விவாடெக் (VivaTech) உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட்அப் மாநாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நிகழ்வில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் புதுமை தொழில்முனைவோர் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடியின் பங்கேற்பு, இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, ஸ்டார்ட்அப் வளர்ச்சி மற்றும் புதுமைத் துறைகளில் உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் முயற்சிக்கும் இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை வெளிப்படுத்தும் வகையில், பிரதமர் மோடியின் இந்த பிரான்ஸ் பயணம் முக்கிய கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 33 சர்வதேச விருதுகள் பெற்று சாதனை படைத்தார் பிரதமர் மோடி!! இதோ முழு பட்டியல்!!