வளர்ந்த பொருளாதார நாடுகளாகக் கருதப்படும் ஏழு நாடுகளின் கூட்டமைப்பு ஜி-7 கூட்டமைப்பு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நாடுகளுக்கு இடையேயான கூட்டங்களில் பொருளாதார முன்னேற்றம், வணிகம் சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இந்த கூட்டமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளது.
ஒவ்வோா் ஆண்டும் நடைபெறும் இந்த அமைப்பின் உச்சி மாநாடுகளில் சிறப்பு அழைப்பாளா்களாக இந்தியா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகள் பங்கேற்பது வழக்கம். 2022-இல் ஜொ்மனியில் நடைபெற்ற உச்சி மாநாட்டிலும், 2023-இல் ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டிலும் பிரதமா் மோடி பங்கேற்றாா். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 அமைப்பின் செயல்திட்டங்கள் வகுப்பு கூட்டத்திலும் பிரதமா் மோடி பங்கேற்றாா்.

அதன்படி ஜி-7 மாநாடு இந்தாண்டு கனடாவில் வரும் ஜூன் 15ஆம் தேதி 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் ரஷிய-உக்ரைன் போா் உள்ளிட்ட பல்வேறு சா்வதேச விவகாரங்கள் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: அம்மாடியோவ்வ்.. ராக்கெட் வேகத்தில் பொருளாதார வளர்ச்சி.. ₹2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்..!
இந்த மாநாடு தொடர்பாக கனடா தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அழைப்பு வராத நிலையில், இந்த மாநாட்டை பிரதமர் மோடி புறக்கணித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜி-7 கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாத போதிலும், இந்தியா கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு அழைப்பாளராக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின், முதல் முறையாக ஜி - 7 மாநாட்டில் மோடி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு கனடா ஆதரவாக உள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமடைந்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவும் கனடா செல்ல மோடி தயாராக இல்லை என கூறப்படுகிறது.
காலிஸ்தான் பயங்கரவாதிகள் தங்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும் என்று பல வருடங்களாக வலியுறுத்தி வருகின்றனர். இதில் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வாழும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் காலிஸ்தானுக்கான கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இதில், கனடாவில் வாழும் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் தலைமையில் காலிஸ்தான் கோரிக்கை வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர் கடந்த 2023ஆம் ஆண்டு மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடா்புள்ளது என்று அந்த நாட்டின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ தொடா் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடா்ந்து, இரு நாடுகளிடையேயான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகி, லிபரல் கட்சியின் புதிய தலைவா் மாா்க் காா்னி தலைமையில் புதிய அரசு அமைந்தது. ஆனால், அதன்பிறகும் கனடா-இந்தியா இடையே தூதரக உறவுகளை மீட்டெடுப்பதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அதோடு, கனடாவில் சுதந்திரமாக செயல்பட்டுவரும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பினரை கட்டுப்படுத்துவது தொடா்பான இந்திய அரசின் வலியுறுத்தல் மீது புதிய அரசும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்தச் சூழலில், இரு நாடுகளிடையேயான தற்போதைய உறவு நிலையைக் கருத்தில்கொண்டு கனடா ஜி7 உச்சி மாநாட்டை புறக்கணிக்க பிரதமா் முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன. கனடாவில் புதிய அரசு அமைந்திருந்தாலும், அங்குள்ள காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிராக இருப்பதால் பிரதமர் மோடி ஜி-7 மாநாட்டைப் புறக்கணித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் ஆட்சி கவிழ நாங்கள் தான் காரணம்.. பஹல்காம் தாக்குதல் தீவிரவாதி ஆணவம்..!