உலக பெரும் பணக்காரரும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி ஆய்வு, சுற்றுலா உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் அடுத்தடுத்து ராக்கெட் சோதனையை ஸ்டார்ஷிப் செய்து வருகிறது.
இந்த ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டார்ஷிப், நிலவுக்குச் செல்லும் பயணங்களுக்கான திட்டங்களுடனும், செவ்வாய் கிரகத்துக்கான பயணத் திட்டங்களுடனும், மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் எலான் மஸ்க்கின் நோக்கத்துக்கான நம்பிக்கையாக உள்ளது.

அதிலும் குறிப்பாக இந்த ஸ்டார்ஷிப் விண்கலம் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஒரு லட்சியத் திட்டமாகவே கருதப்படுகிறது. இது மனிதர்களை நிலா மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்வது, செயற்கைக்கோள்களை ஏவுவது, மற்றும் விண்வெளியில் சரக்குகளை கொண்டு செல்வது போன்ற நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பேசுனது தப்புதான்.. யூடர்ன் போட்டு சரண்டரான மஸ்க்.. மன்னித்து பெரிய மனுஷனான டிரம்ப்..!
இந்த சோதனைகளின் ஒரு பகுதியாக டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ்-எக்ஸின் மாஸ்ஸி (Massey) சோதனை தளத்தில், ஸ்டார்ஷிப் Ship 36 என்ற புரோட்டோடைப் விண்கலம் வெடித்துச் சிதறியது. இது பத்தாவது சோதனைப் பயணத்திற்கான “ஸ்டாட்டிக் ஃபயர் டெஸ்ட்” (static fire test) எனப்படும் இயந்திர சோதனைக்கு தயாராகிக் கொண்டிருந்த போது நிகழ்ந்தது.
இந்த சோதனையின்போது, ராக்கெட் தரையில் நிலையாக நிறுத்தப்பட்டு, அதன் இன்ஜின்கள் இயக்கப்படும். திரவ மீத்தேன் மற்றும் திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தபோது இந்த பெரும் வெடிப்பு நிகழ்ந்தது.

அப்போது ராக்கெட்டின் அடிப்பகுதியில் இருந்து ஒரு சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டு, சுற்றியுள்ள பகுதிகள் தீப்பிழம்புகள் மற்றும் புகையால் சூழ்ந்தது. இந்த விபத்தானது ஸ்டார்ஷிப் திட்டத்துக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக, யாரும் காயமடையவில்லை என ஸ்பேஸ்-எக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தனது அனைத்து விண்கல தயாரிப்புகளையும் காலவரையின்றி நிறுத்தி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு 2025-ம் ஆண்டில் ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டார்ஷிப் திட்டத்ததுக்கான மூன்றாவது தோல்வியாக மாறியுள்ளது. முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், இரண்டு ஸ்டார்ஷிப் சோதனை விண்கலன்கள் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறின. ஒரு விண்கலம் கரீபியனில் விழுந்தது, மற்றொன்று கட்டுப்பாட்டை இழந்து அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து உடைந்தது.
கடந்த மே மாதம் ஒன்பதாவது சோதனைப் பயணம் மேற்க்கொள்ளப்பட்டது. இந்த சோதனைப் பயணம் சுமார் 30 நிமிடங்கள் வரை நன்றாக சென்றாலும், பின்னர் எரிபொருள் கசிவு (fuel leak) காரணமாக விண்கலத்தின் கட்டுப்பாடு இழக்கப்பட்டு, அது இந்தியப் பெருங்கடலில் விழுந்து சிதறியது. இந்த நிகழ்வை ஸ்பேஸ்-எக்ஸ் “திட்டமிடப்படாத விரைவான பிரித்தெடுத்தல்” (rapid unscheduled disassembly) என்று குறிப்பிட்டது.

அதற்கும் முன்பாக கடந்த மார்ச் மாதம் ஏழாவது சோதனைப் பயணம் நடந்தது. இந்த சோதனைப் பயணத்தின்போது ஸ்டார்ஷிப் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வானில் வெடித்துச் சிதறியது. குறிப்பாக, விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு, அதன் பின்புறப் பகுதியில் “சக்தி வாய்ந்த நிகழ்வு” ஏற்பட்டதாக ஸ்பேஸ்-எக்ஸ் தெரிவித்தது, இது இயந்திர இழப்புக்கு வழிவகுத்தது.
கடந்த ஜனவரி மாதம் ஏழாவது சோதனைப் பயணத்தை ஸ்டார்ஷிப் மேற்கொண்டது. இந்த சோதனையின்போதும் ஸ்டார்ஷிப் நடுவானில் வெடித்துச் சிதறியது. எலான் மஸ்க், ஆக்சிஜன் அல்லது எரிபொருள் கசிவு காரணமாக இந்த விண்கலம் உடைந்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போதைய பின்னடைவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம், ‘மீண்டும் மீண்டும் பின்னடைவுகள் இருந்தபோதிலும், நிறுவனம் விரைவான வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான சோதனைகளுடன் முன்னேறியுள்ளது. நாங்கள் ஒவ்வொரு தோல்வியையும் ஒரு கற்றல் வாய்ப்பாக கருதுகிறோம்.
இந்த வெடிப்புச் சம்பவம், புதிய விண்வெளி தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் உள்ளார்ந்த அபாயங்களைக் காட்டினாலும், ஸ்டார்ஷிப்பின் இறுதி வெற்றி விண்வெளிப் பயணத்தில் புரட்சியை ஏற்படுத்தும். பூமிக்கு அப்பால் மனிதர்களையும் சரக்குகளையும் கொண்டு செல்லக்கூடிய விண்கலத்தை உருவாக்குவோம்’ என்று தெரிவித்தது.
இதையும் படிங்க: நல்லதுக்கு இல்லை.. சுத்த பைத்தியக்காரத்தனம்! எலான் மஸ்கை எச்சரிக்கும் அமெரிக்க துணை அதிபர்..