மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் முழுமையாகத் திறந்துவிடுவதாக ஈரான் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்த அடுத்த நாளே இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ளார். லெபனான் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு இணங்க, அமெரிக்கா - ஈரான் இடையிலான இந்த இரண்டு வார கால அமைதிச் சூழலில், ஹார்முஸ் நீரிணை வணிகக் கப்பல்களின் போக்குவரத்திற்காக முழுமையாகத் திறக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பு ஏற்கனவே அறிவித்துள்ள ஒருங்கிணைந்த வழித்தடத்தைப் பின்பற்றி அனைத்து நாடுகளின் வணிகக் கப்பல்களும் பாதுகாப்பாகச் செல்லலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் இந்த முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார். இருப்பினும், அவர் ஒரு முக்கிய நிபந்தனையையும் விதித்துள்ளார் முற்றுகை தொடரும்: ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டதை வரவேற்ற ட்ரம்ப், ஈரானுடனான ஒரு நிரந்தர உடன்பாடு எட்டப்படும் வரை, அந்நாட்டின் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை (Naval Blockade) தொடர்ந்து அமலில் இருக்கும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தம்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!
உலகின் 20 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்ட செய்தி, உலகப் பொருளாதாரத்தில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக முடங்கிக்கிடந்த நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் மீண்டும் தங்களது பயணத்தைத் தொடங்கத் தயாராகி வருகின்றன.
அதிபர் ட்ரம்ப்பின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தம், மத்திய கிழக்கில் ஒரு பெரிய அளவிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வித்திட்டுள்ளது. ஒருபுறம் அமைதிப் பேச்சுக்கள் நடந்தாலும், மறுபுறம் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீடிப்பது ஈரானின் அடுத்தகட்ட நடவடிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் ‘லாக்-டவுன்’! எரிபொருள் தட்டுப்பாட்டால் இயல்பு வாழ்க்கை முடக்கம்!