காசா பகுதியில் இரண்டு ஆண்டுகளாக நீடித்த இஸ்ரேல்-ஹமாஸ் போர் கடந்த ஆண்டு அக்டோபரில் முடிவுக்கு வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 20 அம்சங்களைக் கொண்ட காசா அமைதி திட்டத்தை அறிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக காசாவை மறுசீரமைப்பு செய்யவும், மனிதாபிமான உதவிகளை வழங்கவும் 'காசா அமைதி வாரியம்' என்ற பெயரில் சர்வதேச அமைப்பு உருவாக்கப்பட்டது.
டிரம்ப் தலைமையிலான இந்த வாரியத்தில் சவுதி அரேபியா, கத்தார், துருக்கி, எகிப்து, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியா, ரஷ்யா, கனடா போன்ற நாடுகள் இதில் இணையவில்லை. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இந்த வாரியத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
இதையும் படிங்க: பாக்., பிரதமர் மீண்டும் அமெரிக்கா பயணம்! ட்ரம்புடன் நெருக்கம்! ஷெபாஸ் ஷெரீப்பின் அடுத்தடுத்த அமெரிக்க பயணங்கள்!
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். காசா அமைதி வாரியம் காசாவை மறுசீரமைப்பு செய்வதற்கும், மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை வழங்க உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி அமைதி வாரிய கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் இணைய உள்ளனர். அப்போது இந்த நிதி உறுதிப்படுத்தப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும், காசா மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆயிரக்கணக்கான வீரர்கள் கொண்ட சர்வதேச படை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் டிரம்ப் முன்வைத்த துணிச்சலான அமைதி திட்டம் ஐநா பாதுகாப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் ஒட்டுமொத்த மேற்காசிய அமைதிக்கு வழிவகுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காசா பகுதி போரால் மிகவும் சேதமடைந்துள்ளது. வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், உள்கட்டமைப்புகள் பெருமளவு அழிந்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான நிதி உதவி காசா மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கும்.
சர்வதேச சமூகம் இணைந்து செயல்படுவது வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பு உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. காசா மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு இந்த நிதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இஸ்ரேல் வாங்க மோடி ஜி!! காசா புனரமைப்பு பணியில் மௌனம் காட்டும் இந்தியா! நெதன்யாகு அழைப்பு!