அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலை எதிா்கொண்டு வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், நாட்டின் அதிபராக ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அதிலிருந்தே, தனது தோ்தல் பிரகடனத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை அவா் பிறப்பித்து வருகிறாா்.
அதன் ஒரு பகுதியாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு எந்தெந்த விகிதங்களில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதங்களில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (சற்று தள்ளுபடியுடன்) வரி விதிப்பதாக அறிவித்து அதிா்வலையை ஏற்படுத்தினாா் டிரம்ப்.

அப்போது அவா் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, சீன பொருள்கள் மீது 34 சதவீதம் கூடுதல் வரி அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா, பதிலுக்கு அமெரிக்க பொருள்கள் மீது கூடுதலாக 34 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், ஏப். 10-ஆம் தேதி அது அமலுக்கு வரும் என்றும் அறிவித்தது.
இதையும் படிங்க: கொதிக்கும் அமெரிக்கா.. ராணுவத்தை இறக்கி அடக்குவேன்.. போராட்டக்காரர்களுக்கு அதிபர் ட்ரம்ப் வார்னிங்!
அதையடுத்து, சீன பொருள்கள் மீது மேலும் 50 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தாா். இதன் மூலம், டிரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மட்டும் சீன பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி விகிதம் 104 சதவீதமாக அதிகரித்தது. இது சீனா– அமெரிக்கா இடையே வர்த்தக போராகவே மாறியது.
இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் அடுத்தடுத்து வரி விதித்தன. சீனா மீது அமெரிக்கா 145 சதவீதமும், அமெரிக்கா மீது சீனா 125 சதவீதமும் வரி விதிக்கும் அளவுக்கு போனது. இது உலகளாவிய பங்குச்சந்தையில் தாறுமாறான பாதிப்பை ஏற்படுத்தியது.

இச்சூழலில், இரு நாடுகளும் 90 நாட்களுக்கு வரி விதிப்பை ஒத்திவைப்பதாக பரஸ்பர ஒப்பந்தம் செய்தன. இருநாட்டு தலைவர்களும் சமரச பேச்சு நடத்த முன்வந்தனர்.
கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் தெலைபேசியில் உரையாடினர். இந்த பேச்சு மிகவும் நேர்மறையாக இருந்ததாக டிரம்ப் கூறினார். இதையடுத்து அமெரிக்கா– சீனா அதிகாரிகள் லண்டனில் 2 நாட்களாக வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், சீனாவுடன் வர்த்த ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.

அமெரிக்காவுக்கு காந்தங்கள் மற்றும் அரிய வகை கனிமங்களை சீனா வழங்கும். அதே போல் எங்கள் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படிக்கும் சீன மாணவர்களுக்கு அனைத்து உதவிகள் செய்யப்படும். நாங்கள் மொத்தம் 55 சதவீத வரிகளை பெறுகிறோம். சீனா 10 சதவீத வரியை பெறுகிறது. அமெரிக்கா– சீனா இடையேயான உறவு சிறப்பாக இருக்கிறது என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சீனா– அமெரிக்கா இடையேயான வர்த்தக போர் முடிவுக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: லாஸ் ஏஞ்சல்ஸில் வெடிக்கும் போராட்டம்.. எதிரிகளிடமிருந்து அமெரிக்காவை விடுவிப்பேன் என ட்ரம்ப் சபதம்!