அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை 2வது முறை அதிபரானதும் டொனால்டு ட்ரம்ப் தீவிரப்படுத்தினார். அந்த வகையில், கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பல இடங்களில் குடியேற்ற துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி அதிரடி சோதனை நடத்தி, சட்டவிரோதமாக தங்கியிருந்த 100க்கு மேற்பட்ட வெளிநாட்டவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து மாஸ்க் அணிந்த நபர்கள் லாஸ் ஏஞ்சல்சில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஜனநாயக கட்சியினரும் களத்தில் குதித்துள்ளனர்.
இதனால் சில இடங்களில் போராட்டக்காரரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பெப்பர் ஸ்ப்ரேயை பயன்படுத்தியும், ரப்பர் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகளால் சுட்டும் போராட்டக்காரர்களை போலீசார் கலைக்க முயன்றனர். ஆனாலும் போராட்டம் தொடர்கிறது.
இதையும் படிங்க: லாஸ் ஏஞ்சல்ஸில் வெடிக்கும் போராட்டம்.. எதிரிகளிடமிருந்து அமெரிக்காவை விடுவிப்பேன் என ட்ரம்ப் சபதம்!

போராட்டத்தை கலிபோர்னியா மாகாண அரசு ஒடுக்கவில்லை என குற்றம்சாட்டிய அதிபர் ட்ரம்ப், 2000 ராணுவ வீரர்களை கலவரத்தை அடக்க அனுப்பினார். வைமோ Waymo செல்ப் டிரைவிங் டாக்சிகளை போராட்டக்காரரர்கள் தீ வைத்து எரித்தனர். 5க்கு மேற்பட்ட டாக்சிகள் எரிக்கப்பட்டன. கொளுத்து; தீ வை; விடாதே என போராட்டக்காரர்கள் கோஷங்களை முழங்கியதை கேட்க முடிந்தது. டாக்சிகளை எரித்தவர்கள் மெக்சிகோ தேசியக் கொடியை உயர்த்தி பிடித்து கோஷங்களை முழங்கினர்.
லாஸ் ஏஞ்சல்ஸ்சின் வேறு சில பகுதிகளில் போராட்டக்காரர்கள் பாலஸ்தீன கொடிகளுடன் டிரம்புக்கு எதிராக கோஷமிட்டனர். அமெரிக்க இமிகிரேஷன் அதிகாரிகள் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஓடி விடுவது நல்லது என ஆவேசமாக கோஷமிட்டனர்.
கிட்டத்தட்ட 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராட்டக்காரர்கள் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள நெடுஞ்சாலையில் குவிந்தனர். சாலையை தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவர்களை விரட்டியடிக்க போலீசார், கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகளால் சுட்டும் பலன் இல்லை.

இதனால் பல மணிநேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்களை வந்த வழியே அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். லாஸ் ஏஞ்சல்ஸில் கலவரத்தை ஒடுக்க ராணுவ வீரர்களை அனுப்பிய பிறகும் போராட்டக்காரர்கள் தீவைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிபர் ட்ரம்பை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது. அடுத்த கட்டமாக 5000 கடற்படை வீரர்களை லாஸ் ஏங்சல்சில் களமிறக்கப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸில் தொடர்ந்து 6வது நாளாக போராட்டங்கள் தொடர்வதால், வன்முறையை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, அரசியல் ரீதியிலும் இந்தப் பிரச்னை தீவிரமானது. குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்பின் நடவடிக்கைக்கு, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கலிபோர்னியா மாகாண கவர்னர் காவின் நியூசம், லாஸ் ஏஞ்சலஸ் மேயர் காரன் பாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், அதிபர் டிரம்ப் கூறியுள்ளதாவது: வெளிநாட்டு எதிரிகளான, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த மிருகங்கள், நம் நாட்டுக்கு எதிரானவர்கள். வெளிநாட்டு எதிரிகள், அமெரிக்காவுக்குள் படையெடுத்து வெற்றி பெற அனுமதிக்க மாட்டேன். அதுதான் தற்போது நடந்து வருகிறது.
அரசின் நடவடிக்கையை எதிர்த்து நடக்கும் போராட்டம் கலகமாக மாறினால், 1807ம் ஆண்டு கலகத் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த தயங்க மாட்டேன். இந்த சட்டத்தின்படி, நாட்டின் எந்தப் பகுதியிலும் நாட்டுக்கு எதிராக கலகம் நடந்தால், ராணுவத்தை அனுப்ப அதிபருக்கு அதிகாரம் உள்ளது என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கொஞ்சம் ஓவரா தான் போயிட்டோமோ! ட்ரம்ப்பை வச்சு செய்த எலான் மஸ்க் திடீர் வருத்தம்..!