லண்டன்: அண்டை நாடான வங்கதேசத்தில் சமீப காலமாக ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் மீதான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் இப்போது பிரிட்டன் பார்லிமென்ட் வரை சென்றுள்ளது.
பிரிட்டனின் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யும், பிரிட்டிஷ் ஹிந்துக்களுக்கான அனைத்துக் கட்சி பார்லிமென்ட் குழுவின் தலைவருமான பாப் பிளாக்மேன், நேற்று பார்லிமென்டில் உரையாற்றினார். அவர் கூறியதாவது:
“வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பலர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகள், கோயில்கள், உடைமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய கொடூர சம்பவங்கள் என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.
இதையும் படிங்க: 7 மாதத்தில் 116 பேர் கொலை!! சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல்!! வங்கதேசத்தில் அராஜகம்!
அந்நாட்டில் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்று கூறப்படுகிறது. ஆனால், மிகப்பெரிய கட்சியான அவாமி லீக் (கருத்துக்கணிப்பில் 30% ஆதரவு பெற்றிருந்தாலும்) தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் முஸ்லிம் பயங்கரவாத குழுக்கள் ஒரு பொது ஓட்டெடுப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இது வங்கதேச அரசியலமைப்பையே மாற்றிவிடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். இதுகுறித்து பிரிட்டன் அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த பார்லிமென்ட் தலைவர் ஆலன் கேம்ப்பெல் கூறுகையில், “மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் பிரிட்டன் அரசு உறுதியாக உள்ளது. வங்கதேச இடைக்கால அரசாங்கத்திடம் இந்த விஷயத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
மதம், இனம் சார்ந்த அனைத்து வன்முறைச் செயல்களையும் நாங்கள் கண்டிக்கிறோம். அமைதியான, நம்பகமான தேர்தலுக்கு ஆதரவளிக்கிறோம். வெளியுறவு செயலர் யெவெட் கூப்பரின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்படும்” என்றார்.
வங்கதேசத்தில் தொடர் வன்முறை மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் கவனம் செலுத்தப்படும் நிலையில், பிரிட்டன் பார்லிமென்டில் எழுப்பப்பட்ட இந்த கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் 2வது வாரத்தில் 4வது கொடூர சம்பவம்!! இந்து தொழிலதிபருக்கு நேர்ந்த துயரம்! கதறி அழும் மனைவி!