சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் யான்பு பகுதியில் இயங்கி வரும் 'சவூதி அராம்கோ' எண்ணெய் நிறுவன வளாகங்களைக் குறிவைத்து, பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு மிகப்பெரிய அளவிலான ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர் அமைப்பு அறிவித்துள்ளது.
ஏமனில் நிலவி வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹூத்தி படைகளுக்கும் இடையேயான மோதல் தற்போது உச்சக்கட்டப் போராக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், தலைநகர் ரியாத்தில் உள்ள மிக முக்கிய அதிகார மையங்கள் மற்றும் செங்கடல் துறைமுக நகரான யான்புவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவூதி அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஆகியவற்றைக் குறிவைத்து இரு பெரும் தாக்குதல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளதாக ஹூத்தி அமைப்பின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரீ அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். ஏமன் மீது சவூதி கூட்டுப் படைகள் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தீவிரத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே, ஹூத்தி படைகள் தலைநகர் ரியாத்தைக் குறிவைத்து வீசிய பாலிஸ்டிக் ஏவுகணையைத் தங்களது வான் பாதுகாப்புப் படை சரியான நேரத்தில் வானிலேயே இடைமறித்து முழுமையாகத் தகர்த்து அழித்துவிட்டதாகச் சவூதி அரேபியக் கூட்டுப் படை உறுதிப்படுத்தியுள்ளது. தலைநகர் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதை சவூதி அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ள போதிலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் விமான நிலையங்களுக்கு எவ்விதப் பெரும் சேதமும் ஏற்படவில்லை என அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் துர்க்கி அல்-மால்கி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெகவிடம் ஏன் இந்தக் கள்ளத்தனம்? ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு எம்பி சுப்பராயன் கேள்வி!
எனினும், ஏவுகணை இடைமறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரியாத்தின் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், எரிபொருள் கிடங்கு அருகே பெரும் கரும்புகை வானுயர எழும்பியதாகவும் சர்வதேச ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் ரியாத் மட்டுமின்றி, யான்பு, தாயிப், பைஷ் மற்றும் ஃபராசான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் பொது உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டு ட்ரோன்களையும் சவூதி வான் பாதுகாப்புப் படைகள் முறியடித்துள்ளதாகக் கூட்டுப்படை அறிவித்துள்ளது. தலைநகர் ரியாத் மீது தாக்குதல் அபாயம் இருப்பதாக நள்ளிரவில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு, பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
சவூதி அரேபியாவின் முக்கிய நகரங்களையும் எண்ணெய் உள்கட்டமைப்புகளையும் குறிவைத்து ஹூத்தி படைகள் மீண்டும் தங்களது ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதுடன், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சந்தையிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாளை முதல் சீமான் சூறாவளி பரப்புரை!தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் களத்தில் நாதக தீவிரம்!