குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து நேற்று லண்டனுக்கு டேக் ஆப் ஆன ஏர் இந்தியா விமானம் அடுத்த சில நிமிடங்களில், மருத்துவக்கல்லூரி கட்டடம் மீது விழுந்து வெடித்து சிதறியது. விமானத்தில் பயணித்த 242 பேரில், ஒருவரை தவிர 241 பேர் இறந்தனர். விமானம் விழுந்த கட்டடத்தில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் பலரும் உடல் கருகினர். இதனால், பலி எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்த பயணி உள்ளிட்டோர் ஆமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர், விபத்து மற்றும் மீட்பு பணிகள் பற்றி பிரதமர் மோடி கேட்டறிந்தார். ஆமதாபாத் மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி, விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: விமான விபத்தில் தப்பியது ஒருவரல்ல.. இருவர்! உடம்பெல்லாம் நடுக்கத்துடன் விவரிக்கும் இளம்பெண்..!
தற்போது உடல் கருகி இறந்தவர்களின் டிஎன்ஏ டெஸ்ட் மூலம் அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இறந்த பலரின் கதைகளை கேட்டாலே மனது கனக்கிறது. அப்படி விமானத்தில் பயணித்த பயணிகளில் ஒருவர் குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி.

மியான்மரில் 1956, ஆகஸ்ட் 2 ஆம் தேதியில் பிறந்த விஜய் ரூபானி, 1996 - 97 ராஜ்கோட் மேயராகவும், 2006 -12 வரையில் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2016 - 2021 வரையில் குஜராத் மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். பாஜகவின் மூத்தத் தலைவரான ரூபானி, குஜராத் போக்குவரத்து, தொழிலாளர் மற்றும் நீர்வழங்கல் துறைகளிலும் அமைச்சராக பதவி வகித்தவர்.
லண்டனில் உள்ள மனைவி மற்றும் மகளை பார்ப்பதற்காக விமானத்தில் பயணித்திருந்தார். ரூபானியின் லக்கி நம்பரே அவரது மரணத்திலும் வந்தது தெரிய வந்துள்ளது. விஜய் ரூபானிக்கு '1206' என்பது ராசியான நம்பராக இருந்ததாக கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் அவர் வைத்து இருந்த ஸ்கூட்டரில் இருந்து முதல்வராக பதவி வகித்த போது வைத்திருந்த அரசு கார் வரை அனைத்திற்கும் '1206' என்பதே பதிவு எண்ணாக இருந்துள்ளது.

லக்கி நம்பருடனான தொடர்பு கடைசியில் மரணத்தில் முடிந்து உள்ளது. அவர் இறந்த தேதி 12ம் தேதி ஆறாவது மாதமாக உள்ளது. 12 மணி 10 நிமிடங்களுக்கு போர்டிங் பாஸ் வாங்கி உள்ளார். அவரது விமான சீட் எண்ணும் 12 ஆக இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரூபானி வீட்டுக்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கற்பனை செய்ய முடியாத துயரம்! இதயத்தை உடைக்கும் வலி.. நொறுங்கிப் போன பிரதமர் மோடி..!