புதுடில்லி: இந்தியாவில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட சிந்தி சமூக மணப்பெண்கள், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இந்தியா வந்தடைந்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் காரணமாக விசா மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் நீடித்த நிலையில், மூன்றாவது நாடுகள் வழியாக அவர்கள் இந்தியாவுக்கு வந்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த சிந்தி சமூக குடும்பங்களில், இந்தியாவில் வசிக்கும் உறவினர்கள் அல்லது அதே சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களுடன் திருமண உறவு ஏற்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இதன்படி நாக்பூர், ராய்ப்பூர், ஜோத்பூர், புனே உள்ளிட்ட இந்திய நகரங்களைச் சேர்ந்த ஆண்களுடன் பல பாகிஸ்தான் பெண்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த 2025 ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் கடுமையான பதற்றம் ஏற்பட்டது. இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான பயண மற்றும் விசா கட்டுப்பாடுகள் மேலும் கடுமையானது. இதனால் இந்தியாவில் திருமணம் செய்ய இருந்த 150-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பெண்களின் திருமண ஏற்பாடுகள் முடங்கின.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத்துக்கு என்ஐஏ சம்மன்!
நீண்ட காலமாக திருமணத்தை எதிர்பார்த்து காத்திருந்த பெண்களின் நிலை குறித்து சிந்தி சமூக அமைப்புகள் கவனம் செலுத்தின. பாகிஸ்தானின் கோட்கியில் உள்ள ஷடானி தர்பார் அமைப்பின் ஆன்மீகத் தலைவர் சாந்த் யுதிஷ்டிர்லால் ஷடானியை அவர்கள் அணுகினர். இதையடுத்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் திரட்டப்பட்டு, இந்திய உள்துறை அமைச்சகத்திடம் விசா வழங்கக் கோரி பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது.

கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, இந்தியாவுக்குள் வருபவர்கள் தரைவழியாக அல்லாமல் விமானம் மூலம் மட்டுமே வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் விசா வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நேரடி விமான சேவைகள் இல்லாததால், மணப்பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் துபாய், மஸ்கட், இலங்கை உள்ளிட்ட மூன்றாவது நாடுகள் வழியாக பயணம் செய்து இந்தியாவை அடைந்துள்ளனர்.
நாக்பூர் சிந்தி சமூகத் தலைவர் ராஜேஷ் ஜாம்பியா கூறுகையில், இதுவரை 150 மணப்பெண்கள் இந்தியா வந்துள்ளதாகவும், நாக்பூரில் மட்டும் 15 திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பாகிஸ்தானில் இதேபோன்று மேலும் சுமார் 300 பெண்கள் இந்தியாவில் திருமணம் செய்வதற்காக காத்திருப்பதாகவும், அவர்களுக்கும் விசா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிந்தி சமூகத்தினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சீனா-துருக்கியுடன் கைகோர்ப்பு! அடுத்தடுத்து பாக்., வந்த ராணுவ விமானங்கள்! இந்தியாவுக்கு புது தலைவலி!