மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாகச் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைச் சமாளிக்க, சமையல் எரிவாயு (LPG) முன்பதிவில் புதிய கட்டுப்பாடுகளை ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. குறிப்பாக, கிராமப்புற நுகர்வோருக்கான சிலிண்டர் முன்பதிவு கால இடைவெளியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்த நுகர்வோர், அடுத்த சிலிண்டருக்கான முன்பதிவைச் செய்ய 45 நாட்கள் காத்திருக்க வேண்டும். 45 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டருக்கான முன்பதிவு முறை ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற நுகர்வோரைப் பொறுத்தவரை, இந்த முன்பதிவு கால இடைவெளி 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: Indane வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் இதோ..!!

நாடு முழுவதும் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இருப்பிலுள்ள சிலிண்டர்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமமாகச் சென்றடைவதை உறுதி செய்யவே இந்த தற்காலிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு சிலிண்டர்களை அதிக அளவில் பதுக்குவதைத் தவிர்க்கவும், தேவையற்ற 'பேனிக் புக்கிங்' (Panic Booking) முறையை ஒடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
மக்களவையில் இன்று இது குறித்துப் பேசிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, உள்நாட்டில் எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், விநியோகச் சங்கிலியைச் சீரமைக்க இத்தகைய கட்டுப்பாடுகள் அவசியமாகின்றன எனத் தெரிவித்தார். போர்ச் சூழல் சீரடையும் வரை இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடா..?? வீட்டு உபயோக சிலிண்டர் மீதே கவனம்..!! மத்திய அரசு சொல்வது என்ன..??