பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த கோரி I.N.D.I.A கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட 15 கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதின. I.N.D.I.A கூட்டணியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி அதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமருக்கு தனி கடிதம் எழுதி இருக்கிறது. I.N.D.I.A கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறிவிட்டதை இது உணர்த்தி இருப்பதாக செய்திகள் வந்தன. அக்கட்சி தேசிய ஊடக பிரிவு பொறுப்பாளர் அனுராக் தண்டா அதை உறுதிப்படுத்தி உள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது காங்கிரசுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் இடையேதான் உண்மையான கூட்டணி இருக்கிறது. மோடிக்கு அரசியல் ரீதியாக பயன்படும் விஷயங்களை மட்டுமே ராகுல் காந்தி சொல்கிறார். அதற்கு பதிலாக, காந்தி குடும்பம் ஜெயிலுக்கு போவதில் இருந்து மோடி பாதுகாக்கிறார். குடிநீர், மின்சாரம், கல்வி, மருத்துவம் போன்ற வசதிகளை மக்களுக்கு வழங்க இருவருமே ஆர்வம் காட்டவில்லை. இந்திய அரசியலை சுத்தம் செய்ய, காங்கிரஸ்-பாஜ கூட்டு சதியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
இதையும் படிங்க: கருத்து சுதந்திரம்னா எதை வேணும்னாலும் பேசுவீங்களா? ராகுல்காந்திக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் நறுக் கேள்வி!
மோடியும், ராகுல் காந்தியும் மேடைகளில் ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் போல தோன்றலாம். ஆனால், ராகுல் காந்தி மோடியின் அரசியலுக்கும் மோடி ராகுலின் அரசியலுக்கும் உத்தரவாதம் அளித்து செயல்படுகின்றனர். காங்கிரசின் பலவீனமான அரசியல் பாரதிய ஜனதாவுக்கு அதிகாரம் அளிக்கிறது. பாரதிய ஜனதாவின் அரசு காங்கிரசின் ஊழலை மறைக்கிறது. 2024 பார்லிமென்ட் தேர்தலுக்காகத்தான் இண்டி கூட்டணி அமைக்கப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சியைப் பொறுத்தமட்டில் கூட்டணி அமைக்கப்பட்டதன் நோக்கம் முடிந்துவிட்டது. இனி ஆம் ஆத்மி கட்சி அந்தக் கூட்டணியில் இருக்காது. ஒவ்வொரு மாநில தேர்தலிலும் ஆம் ஆத்மி தனித்தே போட்டியிடும். வரும் பீகார் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவோம்.இருப்பினும், நாட்டுக்கு நல்லது என்ற அடிப்படையில் எதிர்க்கட்சிகள் எடுக்கும் முடிவுகளுக்கு ஆம் ஆத்மி எம்.பி.க்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று அனுராக் தண்டா தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்தியிலும், டில்லியிலும் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது அவற்றின் ஊழல்களை எதிர்த்து அந்தக் கட்சியை ஆரம்பித்தார். ஆனால், I.N.D.I.A கூட்டணியில் இடம் பெற்ற காரணத்தால் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து டில்லி, குஜராத், ஹரியானாவில் பார்லிமென்ட் தேர்தலை சந்தித்தார். இரு கட்சிகளுக்குமான உறவு ஒட்டாமலே இருந்தது.

அதே சமயம் பஞ்சாபில் ஆம் ஆத்மியும் காங்கிரசும் தனித்தே போட்டியிட்டன. கடந்தாண்டு ஹரியானா சட்ட சபை தேர்தலில் இரு கட்சிகளும் தேர்தல் கூட்டணியை ஏற்படுத்த முடியாமல் தனித்துப் போட்டியிட்டன. இந்தாண்டு துவக்கத்தில் நடந்த டில்லி சட்ட சபை தேர்தலிலும் அதே நிலை தொடர்ந்தது. இப்போது I.N.D.I.A கூட்டணியில் இல்லை என்பதை ஆம் ஆத்மி தெளிவுபடுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: அதுக்கு இப்போ என்ன அவசியம்.. ராகுல்காந்தி, கார்கே கோரிக்கைக்கு ’No’ சொன்ன மோடி..!