காங்கிரஸ் எம்.பி., ராகுல், 2022 டிசம்பரில், 'பாரத் ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரில், நாடு முழுதும் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, ராஜஸ்தானில் நடந்த பாரத் ஜோடா யாத்திரையின் போது செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ராணுவம் பற்றி பேசிய விஷயம் சர்ச்சையாக வெடித்தது. சீனா இந்தியாவின் 2000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை கைப்பற்றி விட்டது. 20 இந்திய வீரர்களையும் கொன்றது. அருணாச்சலப்பிரதேசத்தில் நம் வீரர்களை அடித்து நொறுக்கியது என்று ராகுல் காந்தி பேசினார்.

ராணுவம் குறித்து ராகுல் காந்தி அவதூறு கிளப்பியதாக, ராணுவத்தின் ஒரு அங்கமாக இருக்கும் எல்லையோர சாலை அமைப்பின் முன்னாள் இயக்குனர் உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா லக்னோ கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். சீன ராணுவம் நம் வீரர்களை அடித்து நொறுக்குகிறது என்று மிகவும் இழிவான முறையில் ராகுல் காந்தி திரும்ப திரும்ப சொன்னார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரி இருந்தார். இதையடுத்து, ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான லக்னோ சிறப்பு நீதிமன்றம், ராகுல் காந்தி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
இதையும் படிங்க: அதுக்கு இப்போ என்ன அவசியம்.. ராகுல்காந்தி, கார்கே கோரிக்கைக்கு ’No’ சொன்ன மோடி..!
உடனே, தனக்கு எதிரான வழக்கையும், சம்மனையும் ரத்து செய்யக்கோரி அலகாபாத் ஐகோர்ட் லக்னோ கிளையில் ராகுல் காந்தி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. கருத்து சுதந்திரம் அடிப்படையில் பேசியதாக ராகுல் காந்தி தரப்பு கூறி இருந்தது.

இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். மக்கள், பாரத் ஒற்றுமை யாத்திரை பற்றி கேட்பர்; அசோக் கெலாட், சச்சின் பைலட் பற்றி கூட கேட்பர். ஆனால், இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்தது குறித்தோ, நம் ராணுவத்தினர் தாக்கப்பட்டது குறித்தோ கேள்வி எழுப்ப மாட்டார்கள். பின், ஏன் இந்த பேச்சு?
‛அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 19(1)(a) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த சுதந்திரம் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. இந்திய ராணுவம் மீது அவதூறு வெளியிடுவதற்கு கருத்து சுதந்திரத்தில் இடம் இல்லை’ என்று நீதிபதி சொன்னார். அதே போல் வழக்கு தொடுத்தவர் ராணுவ அதிகாரி இல்லை. எனவே அவரை பாதிக்கப்பட்ட நபர் கிடையாது என்று ராகுல் காந்தி தரப்பு மனுவில் சொல்லி இருந்தது.

இந்த வாதத்தையும் நீதிபதி நிராகரித்தார். வழக்கு தொடுத்தவர் கர்னலுக்கு சமமான பதவியான எல்லையோர சாலை அமைப்பின் இயக்குனராக இருந்தவர் என்பதால், அவரை பாதிக்கப்பட்டவராக எடுத்துக்கொள்ள முடியும் என்று கோர்ட் கூறியது. ராணுவம் அல்லது ராணுவத்தினரை அவமதிக்கும் வகையில் பேசுவது கருத்து சுதந்திரத்தில் வராது.
ராகுல் காந்தியின் கருத்துகள், நம் ராணுவத்தினரையும், அதை சார்ந்தவர்களையும் மனதளவில் பாதிக்கும் வகையில் உள்ளன. ஆகையால், லக்னோ சிறப்பு நீதிமன்ற சம்மனுக்கு எதிரான ராகுல் காந்தியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த மனு மீது விரிவான உத்தரவு அடுத்த வாரம் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.
இதையும் படிங்க: வாய் விட்டு மாட்டிக்கொண்ட ராகுல்.. கோர்ட் பிறப்பித்த பிடிவாரண்ட்.. மீண்டும் சிக்கல்..!