உலகத்தையே அதிர வைத்த ஆமதாபாத் விமான விபத்தில் இன்னும் மர்மம் விலகவில்லை. ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய 171 ரக விமானம், டேக் ஆப் ஆன ஒரு நிமிடத்துக்குள் விபத்துக்குள்ளானது. ஏர்போர்ட்டுக்கு பக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் மெஸ் பில்டிங் மீது விழுந்து வெடித்தது.
விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் இறந்தனர். ஒருத்தர் மட்டும் உயிர் பிழைத்தார். விமானம் விழுந்ததில் கல்லூரி மெஸ், விடுதியில் இருந்த மேலும் 33 பேர் மரணம் அடைந்தனர். மொத்த பலி 274 ஆக உயர்ந்தது.
உலகை உலுக்கிய விமான விபத்து எப்படி நடந்தது என்று இப்போது வரை தெரியவில்லை. பொதுவாக 3000 முதல் 4000 அடி உயரத்தில் விமானம் பறக்கும். அவ்வளவு உயரத்துக்கு டேக் ஆப் செய்ய வேண்டும்.
ஆனால் 645 அடி விமானம் சென்ற போதே சட்டென கீழே இறங்கி விழுந்து நொறுங்கியது. கடைசியாக விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட பைலட் மேடே அலர்ட் விடுத்து இருந்தார். இது விமானம் ஆபத்தில் சிக்கி இருப்பதை சொல்ல பயன்படுத்தும் ஒரு அபாய வார்த்தை. இதை சொன்ன மறுநொடியே விபத்து நடந்து விட்டது.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..!

எனவே பிளாக் பாக்ஸ் கிடைத்தால் தான் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும் என்று முதலில் சொல்லப்பட்டது. இதற்கிடையே கட்டுமான இடிபாடுகளில் இருந்து சில நாட்களுக்கு முன்பு பிளாக் பாக்ஸ் கிடைத்தது. பிளாக் பாக்ஸ் பொதுவாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இடிபாடுகள், புதர் பகுதிகளில் இருந்து எளிதாக கண்டுபிடிக்க பிளாக் பாக்சில் ஆர்ஞ்சு நிறம் பூசப்பட்டு இருக்கும். பிளாக் பாக்சில் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் என்னும் சிவிஆர் மற்றும் விமான டேட்டா ரெக்கார்டர் எனப்படும் எப்டிஆர் என 2 முக்கிய சாதனங்கள் இருக்கும்.
சிவிஆர் சாதனம் பைலட்களின் உரையாடல்கள், கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட ரேடியா அழைப்புகள், காக்பிட் அலர்ட் மற்றும் இதர சத்தங்களை பதிவு செய்யும். இதை சோதித்தால் விபத்தில் சிக்குவதற்கு முன்பு பைலட்டும் கோபைலட்டும் என்ன பேசினார்கள்.

விமானத்தில் என்ன விதமான சத்தம், எந்த நேரத்தில் வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியும். இதை வைத்து விபத்து எப்படி நடந்திருக்கும் என்ற முடிவுக்கு வரலாம். அதே போல் எப்டிஆர் என்னும் விமான டேட்டா ரெக்கார்ட் சாதனம் விமானத்தின் வேகம், உயரம், கருவிகளின் செயல்பாடு உட்பட தொழில்நுட்ப ரீதியிலான பதிவுகளை கொண்டிருக்கும்.
விமானம் துவக்கம் முதல் விபத்து வரை எந்த நேரத்தில் எவ்வளவு வேகம், எவ்வளவு உயரத்தில் சென்றது என்பதை எல்லாம் இதை வைத்து கண்டுபிடிக்கலாம். இதுவும் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்காற்றும். ஆனால் விபத்துக்குள்ளான விமானத்தின் பிளாக் பாக்ஸ் மிகப்பெரிய அளவில் சேதம் அடைந்து இருக்கிறது. அதில் இருந்து எந்தவிதமான தரவுகளையும் எடுக்க முடியவில்லை. மேற்கொண்டு முயற்சி செய்தால், தரவுகளை பதிவு செய்யும் சாதனம் சேதம் அடையும் அபாயம் இருக்கிறது.

இதனால் மேம்பட்ட வசதியுடன் இயங்கும் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்துக்கு பிளாக் பாக்சை அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு காரணம் கருதி இந்தியாவில் இருந்து ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்படும். அதே போல் பிரிட்டனை சேர்ந்த அதிகாரிகளும் அமெரிக்காவுக்கு வருவார்கள். காரணம், அந்த நாட்டை சேர்ந்த மக்கள் மட்டும் 50க்கும் மேற்பட்டவர்கள் விமான விபத்தில் இறந்து இருக்கின்றனர்.
விரைவில் அமெரிக்காவுக்கு பிளாக் பாக்சை அனுப்பும் நடவடிக்கை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்குள்ள விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்து தரவுகளை மீட்டால் மட்டுமே விமான விபத்தில் நீடிக்கும் மர்மம் உடையும் என்று அதிகாரிகள் வட்டாரம் கூறியது.
இதையும் படிங்க: அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!