கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக அமைச்சராகப் பதவி வகித்தவராகவும், கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். செங்கோட்டையன், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார். செங்கோட்டையனின் அதிருப்தி குறித்த பேச்சு, 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசினார்.
அப்போதும் கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இரண்டு வாய்ப்புகள் கிடைத்த போதும் இயக்கம் உடைந்து விடக்கூடாது என்பதற்காக தனது பணிகளை மேற்கொண்டதாகவும் கூறினார். பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்படி செய்யவில்லை என்றால் அந்த எண்ண ஓட்டத்தில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்தார். அனைவரையும் ஒன்றிணைக்க பத்து நாட்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.

இந்த நிலையில் அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஏழு பேரை கட்சிக் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: “இனி பாத்ரூம் போகக்கூட அமித் ஷாகிட்ட பர்மிஷன் கேட்பாரு...” - எடப்பாடி பழனிசாமியை பங்கமாய் கலாய்த்த சு.வெங்கடேசன்...!
செங்கோட்டையனிடம் இருந்து பதவி பறிக்கப்பட்ட நிலையில், அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஏ.கே. செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில் புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.கே.செல்வராஜ் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கட்சிப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசித்ததாக கூறப்பட்டுள்ளது. செங்கோட்டையனை கட்சி பதவியில் இருந்து நீக்கி செல்வராஜ் நியமனம் செய்யப்பட்ட நிலையில், ஏராளமான நிர்வாகிகள் ராஜினாமா கடிதம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “இந்தா ஆரம்பிச்சிட்டாங்க இல்ல” - திமுக பாணியைக் கையில் எடுத்த அதிமுக... தொண்டர்களுக்கு ஆர்.பி. உதயக்குமார் அதிரடி உத்தரவு...!