தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து பல அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 23 அன்று சென்னையில் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இந்த தொகுதிப் பங்கீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் மற்றும் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தப் பங்கீடு சுமுகமாக முடிவடைந்ததாகக் கூறப்படுகிறது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், டிடிவி தினகரன் தலைமையில் 2018-இல் அதிமுகவிலிருந்து பிரிந்து உருவான கட்சியாகும். அம்மா என்று அழைக்கப்படும் ஜெயலலிதாவின் பெயரை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்து 165 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாமல் போனது. அப்போது அது சுமார் 2.35 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. பின்னர் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு சுமார் ஒரு சதவீத வாக்குகளைப் பெற்றது.
இதையும் படிங்க: 210 தொகுதிகளில் நாங்க தான்..!! டெல்லி-னாலே ஸ்டாலினுக்கு பயம்..! தொகுதி பங்கீட்டுக்கு பிறகு இபிஎஸ் சூளுரை..!!
இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் 11 தொகுதிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமமுக போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. மூன்று தனி தொகுதி மற்றும் எட்டு பொது தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சைதாப்பேட்டை, சோளிங்கர், பூவிருந்தவல்லி, நாங்குநேரி, ஓட்டப்பிடாரம், பெரியகுளம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மதுரை மத்தி, தஞ்சாவூர், காரைக்குடி, திருச்சி மேற்கு, மன்னார்குடி ஆகிய தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "FLASH BACK"... 9 வருடங்களுக்கு பிறகு அதிமுக அலுவலகத்தில் கால் வைத்த TTV தினகரன்..!!