வங்காளதேசத்திலிருந்து சட்டவிரோதமாக அசாம் மாநிலத்துக்குள் நுழையும் குடியேறிகள், ஆதார் அட்டையை எளிதாகப் பெற்று வருவதால் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் மாநில அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இனி 18 வயதுக்கு மேற்பட்ட புதிய விண்ணப்பதாரர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படாது என்று அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், “மாநிலத்தில் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் பதிவேடு (NRC) போன்ற ஆவணங்கள் உள்ளவர்களுக்கு மட்டுமே ஆதார் வழங்க வேண்டும் என்ற கொள்கை இருந்தபோதிலும், சிலர் அதைத் தவிர்த்து அட்டை பெற்று வருகின்றனர்” என்றார். குறிப்பாக பார்பேட்டா, துப்ரி, மரிகாவன் (மொரிகாவ்), நாகோன் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் தொகையை விட அதிகமான ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது மாநிலத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் வளங்களை ஒதுக்கீடு செய்வதில் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. சில பகுதிகளில் ஆதார் பதிவு 100 சதவீதத்தைத் தாண்டிய நிலை உள்ளது.முதலமைச்சர் ஹிமந்தா மேலும் கூறியதாவது, “ஆதார் வழங்கும் பணி பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டது. எனவே, இனி 18 வயதுக்கு மேற்பட்டோர் முதன்முறையாக விண்ணப்பித்தால் அட்டை வழங்கப்படாது.
இதையும் படிங்க: ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கணுமா..?? மேலும் ஓராண்டு கால அவகாசம் நீட்டிப்பு.. மத்திய அரசு அதிரடி..!!

விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டும் மாவட்ட ஆட்சியர் மாநில அரசுக்கு முன்மொழிவு அனுப்பி அனுமதி பெற வேண்டும்” என்றார். இந்த நடவடிக்கை மூலம் அதிகப்படியான ஆதார் அட்டைகள் யாருக்கு வழங்கப்பட்டன என்பதை அடையாளம் கண்டு, சட்டவிரோத குடியேறிகளைத் தடுக்க முடியும் என்று அரசு நம்புகிறது. அசாமில் NRC செயல்பாட்டுக்கு பிறகும் சட்டவிரோத பங்களாதேஷியர்கள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைப் பெறுவது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கவலை வெளியிட்டு வந்தன.
இந்த முடிவு மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை பாதுகாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆதார் அட்டை தொடர்பான தவறான பயன்பாடுகளைத் தடுக்கும் வகையில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. அசாம் அரசின் இந்த தீர்மானம் வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோத குடியேற்றப் பிரச்னைக்கு ஒரு முக்கிய தீர்வாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??