டெல்லி அருகே உள்ள நொய்டா, கௌதம புத்தா நகர் மாவட்டத்தின் செக்டார் 55 பகுதியில் சர்வதேச பள்ளி ஒன்று இயங்கி வந்தது. இந்தப் பள்ளியில் வருண் கோயல் என்பவரின் 10 வயது மகன் படித்து வருகிறார். அந்த மாணவன் ஆட்டிசம் எனப்படும் கற்றல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சிறுவனை போன்றே உள்ள ஆட்டிசம் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக சிறப்பு ஆசிரியர்கள் இந்த பள்ளியில் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளான சிறுவன் என்று கூட பாராமல் சிறப்பு பயிற்சியாளரான ஆசிரியர் சரமாரியாக அடித்தும் தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் என அனைவரும் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் பகிரப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த வீடியோ வேகமாக பரவியதை அடுத்து, சிறப்பு பயிற்சியாளர், பள்ளியின் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் மீது சிறுவனின் தந்தை வருண் கோயல் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: மாணவர்களை ஏமாற்றிய FIITJEE மீது வழக்குப்பதிவு.. டெல்லி போலீஸ் அதிரடி..!

பள்ளி ஆசிரியரும், சிறப்பு ஆசிரியருமான அணில் குமார் தனது மகனை அடித்ததாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதனை எடுத்து மூவர் மீதும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம், சிறுவர் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆசிரியர் அணில் குமாரை கைது செய்த போலீசார் பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையே இந்த சம்பவம் குறித்து அறிந்த உத்தர பிரதேச மாநில தொடக்க கல்வித்துறை மாவட்ட கல்வி அதிகாரி ராகுல் பன்வார் நடத்திய விசாரணையில், முறையான அனுமதி இல்லாமல் தனியார் பள்ளி இயங்கியது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பள்ளிக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: இந்து - முஸ்லீம் சண்டை வராமல் இருக்க பள்ளியில் மத உணர்வை கற்றுக்கொடுங்கள்- அண்ணாமலை..!