அண்டை நாடான வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஹிந்து மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினர் கடுமையாக குறிவைக்கப்படுகின்றனர்.
வங்கதேச சிறுபான்மையினர் மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அதிர்ச்சி தரும் அறிக்கையின்படி, கடந்த 7 மாதங்களில் (2025 ஜூன் 6 முதல் 2026 ஜனவரி 5 வரை) மட்டும் 116 சிறுபான்மையினர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள். வன்முறை 45 மாவட்டங்களுக்கு பரவியுள்ளது.
சமீபத்தில் மாணவர் அமைப்பு தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், ஹிந்து சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. அவர்களின் வீடுகள், கடைகள், கோயில்கள் சூறையாடப்படுகின்றன. நேற்று முன்தினம் ஆட்டோ ஓட்டுநரான 28 வயது ஹிந்து இளைஞர் சமீர் தாஸ் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் 2வது வாரத்தில் 4வது கொடூர சம்பவம்!! இந்து தொழிலதிபருக்கு நேர்ந்த துயரம்! கதறி அழும் மனைவி!

மனித உரிமை அமைப்பின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான வன்முறை 1946 முதல் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. 1946-ல் 30 சதவீதமாக இருந்த சிறுபான்மையினர் மக்கள் தொகை, 2020-ல் 9 சதவீதத்திற்கு கீழ் குறைந்துவிட்டது. தற்போது நடக்கும் தாக்குதல்கள் தற்செயலான குற்றங்கள் அல்ல. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒடுக்குவதற்காக திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறை என்று அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
காவல்துறை வன்முறை கும்பல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தயங்குவதால், குற்றவாளிகள் தப்பிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதுவே வன்முறை தொடர்ந்து அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்து சமூகத்தினரின் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்துள்ளது. சர்வதேச அளவில் இந்த விஷயம் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதையும் படிங்க: அதிகரிக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்!! வங்கதேச அரசுக்கு இந்தியா சம்மட்டி அடி!