அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 18வது ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் முதல் முறையாக ஆர்.சி.பி அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் தனது 18 ஆண்டுகால கனவை நினைவாக்கியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இந்த நிலையில் சொந்த ஊர் திரும்பிய பெங்களூர் அணி கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு சென்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் பெங்களூரு அணி வீரர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வரவேற்றார். தொடர்ந்து முதலமைச்சர் சித்தராமய்யாவிடம் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை பெற்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: கமல் மன்னிப்பு கேட்க மறுப்பு! தள்ளிப்போகும் பட வெளியீடு.. வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..!

ஆர்.சி.பி அணியை வரவேற்க விதான் சவுதா பகுதியில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். மேலும் உயர் நீதிமன்ற கட்டடம் மற்றும் மரங்கள் மீது ஏறி நின்றும் வீரர்களை வரவேற்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். தொடர்ந்து பெங்களூரு அணி வீரர்கள், சின்னசாமி மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டனர். அப்போது, பெங்களூரு அணி வீரர்களை பார்ப்பதற்காக சின்னசாமி மைதானம் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால், ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துயர சம்பவத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார், பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு கர்நாடகா அரசே காரணம் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த வழக்கை பிற்பகல் 2.30 மணிக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.
இதையும் படிங்க: நீதிபதி என்ன வரலாற்று வல்லுனரா? கமல் மன்னிப்பு கேட்க கூடாது! சீமான் கறார்..!