ஹரியானாவைச் சேர்ந்த யூ-டியூபர் ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கடந்த 17ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி எஹ்சான் உர் ரஹீம் என்ற டேனிஸ் என்பவருடன் தொடர்பில் இருந்ததும், அவர் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையினருக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. டேனிஸ் மூலமாக பாகிஸ்தானுக்கு சென்ற அவர் அங்கு ஐ.எஸ்.ஐ.யுடன் நேரடி தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.
இதையும் படிங்க: உளவாளி ஜோதி மல்ஹோத்ராவுக்கு பாகிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு.. ஸ்காட்லாந்து யூடியூபர் அதிர்ச்சி தகவல்..
அவரது செல்போன் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட 5 நாள் போலீஸ் காவலில் பல தகவல்கள் வெளிவந்தன. அவருடைய லேப்-டாப்பை ஆய்வு செய்ததில் பாகிஸ்தான் உளவுத் துறையுடன் ஜோதி மேற்கொண்ட உரையாடல்கள், அவர்கள் உடனான அழைப்புகள், பண பரிவர்த்தனைகள் போன்ற தகவல்களும் இருந்தன.

4 பாகிஸ்தானியர்களுடன் ஜோதி மல்ஹோத்ரா நேரடி தொடர்பில் இருந்து தகவல்களை பரிமாறியது, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து சிறப்பு பாதுகாப்பு அனுமதி மற்றும் சலுகைகள் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
வி.ஐ.பி. சலுகையை பயன்படுத்திய ஜோதி மல்கோத்ரா, பாகிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாகூர் உள்பட பல்வேறு இடங்களில் சுற்றிய காட்சிகளும் டிஜிட்டல் ஆவணங்களில் இருந்தன. இந்த வீடியோக்கள் ஜோதியின் பாகிஸ்தான் பயணங்களில் அவர் வி.ஐ.பி. வரவேற்பு பெற்றதை அம்பலப்படுத்தி உள்ளது.

அவர் பாகிஸ்தான் சென்ற சமயத்தில் லாகூரில் அங்குள்ள அனார்கலி பஜாரை சுற்றிப்பார்க்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஏ.கே. 47 துப்பாக்கிகள் ஏந்திய நபர்கள் பாதுகாப்பு அளித்துள்ளனர்.ஸ்காட்லாந்து நாட்டு யூ-டியூபர் கல்லம் மில் Kalum Mill என்பவர் அந்த பஜாரில் இருந்தபோது, ஜோதி மல்ஹோத்ராவை சந்தித்து பேசி வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார்.
வீடியோ காட்சிகளில், தனக்கு முன் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் ஏந்திய நான்கு நபர்கள் இருப்பதாக கல்லம் தெரிவிக்கிறார். ஜோதியுடன் கல்லம் மில் பேசி முடிக்கும் வரை, துப்பாக்கி ஏந்திய நபர்கள் அவருக்கு அருகிலேயே இருந்துள்ளது தெரிகிறது.

இந்த நிலையில் கேரள மாநிலம் கண்ணூரில் நடந்த சுற்றுலாத்துறையின் நிகழ்ச்சியில், உளவாளி ஜோதி மல்ஹோத்ரா பங்கேற்றதாகவும், அதற்கு முழுக்க முழுக்க சுற்றுலா துறையே ஸ்பான்சர் செய்துள்ளதாக பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து கேரள பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் விடுத்த எக்ஸ் தளப்பதிவில், 'பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ராவின் கண்ணூர் பயணத்திற்கு கேரள சுற்றுலாத்துறை ஸ்பான்சர் செய்துள்ளது. அந்தத் துறையின் அமைச்சராக முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஷ் தான் இருக்கிறார்.

ஜோதி மல்ஹோத்ரா யாரை சந்தித்தார்? எங்கு சென்றார்? அவரது வந்ததற்கான உண்மையான நோக்கம் என்ன? பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவாளிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது ஏன்?', என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஜோதி மல்ஹோத்ரா தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில், கேரள சுற்றுலாத்துறை நிகழ்ச்சியில் அரசின் ஸ்பான்சர் மூலம் அவர் கண்ணூர் வந்ததாக எழுந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாக்.-ல் திருமணம்..! உளவாளி ஜோதி மல்ஹோத்ராவின் ரகசிய திட்டம்.. டெலிட் செய்த மெசேஜை ரெக்கவர் செய்த அதிகாரிகள்..!