மத்திய அரசு, மேற்காசியப் போரால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ.) பெரும் நிதி உதவி அளிக்கும் வகையில், 2.50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புதிய கடன் உத்தரவாதத் திட்டத்தை விரைவில் அறிவிக்கவிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் திட்டத்தின்படி, மேற்காசியப் போரின் தாக்கத்தால் வணிகம் பாதிக்கப்பட்டு, கடன் தவணைகளை செலுத்த முடியாத நிலையில் உள்ள நிறுவனங்களுக்கு உதவும் வகையில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அரசு உத்தரவாதம் அளிக்கும். குறிப்பாக, 100 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு கிட்டத்தட்ட 90 சதவீதம் அளவுக்கு திருப்பிச் செலுத்தும் உத்தரவாதம் வழங்கப்படும்.

இந்த உத்தரவாதம், அரசுக்கு சொந்தமான தேசிய கடன் உத்தரவாத நிறுவனம் மூலம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த அரசு சுமார் 17,000 முதல் 18,000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலம், போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து சிறு தொழில் நிறுவனங்கள் விரைவாக மீண்டு வர உதவும் என்று கருதப்படுகிறது.
இதையும் படிங்க: கோவை மெட்ரோவைத் தடுத்தது மோடி அரசு! முதல்வர் ஸ்டாலின் அனல் பறக்கும் பிரசாரம்!
இந்நிலையில், நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைக்கான கடன் வழங்கல் கடந்த ஆண்டில் கணிசமாக அதிகரித்துள்ளது. 'சி.ஆர்.ஐ.எப் ஹை மார்க்' மற்றும் 'சிட்பி' நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை எம்.எஸ்.எம்.இ. துறைக்கு வழங்கப்பட்ட மொத்தக் கடன் 47.80 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 14.90 சதவீதம் அதிகமாகும்.
இந்தக் கடன் வளர்ச்சியில், 5 கோடி ரூபாய் வரையிலான சிறிய கடன்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளன. மேலும், சிறு தொழில் கடன் நிலுவையில் சுமார் 80 சதவீதம் தனி நபர் வணிகர்கள் (Proprietorship firms) மூலம் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு தகவல்களும், தற்போது சிறு தொழில் துறை எதிர்கொள்ளும் சவால்களையும், அதே சமயம் அதன் வளர்ச்சி வேகத்தையும் பிரதிபலிக்கின்றன. மேற்காசியப் போரின் தொடர் பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள நிதி அழுத்தத்தைத் தணிக்க அரசு முன்வருவது வரவேற்கத்தக்கது.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், லட்சக்கணக்கான சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பலனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள், இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமான எம்.எஸ்.எம்.இ. துறையை வலுப்படுத்தி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உற்பத்தி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: ஈரான் போர் எதிரொலி: அடுத்த வரி குறைப்பில் இறங்கிய மத்திய அரசு..!! இதுக்கு ஜீரோ வரியாம்..!!