காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.

இதனிடையே கடந்த மாதம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கைக்கு முன்பு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். இது ஒரு "குற்றம்" என்றும், இதற்கு யார் அதிகாரம் கொடுத்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில், "தாக்குதல் தொடங்குவதற்கு முன் பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்தது ஒரு குற்றம். இதை வெளியுறவுத்துறை அமைச்சர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், "இதற்கு யார் அதிகாரம் அளித்தது? இதன் விளைவாக நமது விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது?" என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். அதை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நடைபெற்ற நிகழ்வுகள் தற்போது வெளியாகி வருகிறது.
இதையும் படிங்க: தீவிரவாதிகளை ஆதரித்தால் பதிலடி கடுமையாக இருக்கும்.. பிரதமர் மோடி எச்சரிக்கை!!

அந்தவகையில், இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகு 5 நிமிடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். சவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் 'எதிர்காலப் போர்கள் மற்றும் போர்முறை' குறித்த சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் உரையாற்றிய ஜெனரல் சவுகான், மே 7 அன்று தாக்குதல் நடத்தியதும், பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகாலை 1 மணி முதல் 1.30 மணிக்குள் தாக்குதல் நடத்திய பின், ஐந்து நிமிடங்களில் பாகிஸ்தானுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்துரை விமானப் போரில் ஒரு வரலாற்றுச் சாதனை. துல்லியமான, இடைவிடாத நடவடிக்கைகளை எதிரி நாட்டுக்குள் மேற்கொள்ளப்பட்டது. விமானப் போரைப் பொறுத்தவரை ஆபரேஷன் சிந்துர் ஒரு வரலாற்றை உருவாக்கியது. துல்லியத்துடனும், ஆக்கிரமிப்பு நோக்கத்துடனும் இடைவிடாத தாக்குதல்களை மேற்கொண்டோம். எதிரி நாட்டுக்குள் ஊடுருவ முடிந்தது ஒரு பெரிய சாதனை என்று தெரிவித்துள்ளார். ஜெனரல் சவுகானின் இந்த கருத்து, காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எங்கு இருக்கிறார்களோ அங்கேயே அழிக்கப்படுவார்கள்... பாக்.,க்கு பிரதமர் மோடி எச்சரிக்கை!!