மத்திய பிரதேசத்தில் போபாலில் ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300வது பிறந்த நாளை முன்னிட்டு 'மகிளா சக்திகரன் மகா சம்மேளனம்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பஹல்காமில் தீவிரவாதிகள் நமது அப்பாவி மக்களை ரத்தம் மட்டும் சிந்த வைக்கவில்லை. அவர்கள் நமது கலாச்சாரத்தைத் தாக்கினர். அவர்கள் நமது சமூகத்தைப் பிரிக்க முயன்றனர். பயங்கரவாதிகள் இந்தியாவின் பெண்கள் சக்திக்குச் சவால் விடுத்தனர்.

இந்த சவாலே பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் அழிவாக மாறியது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா மிகத் துல்லியமான தாக்குதல்களை நடத்தின. பயங்கரவாத முகாம்களை முழுமையாக அழித்தன. பாகிஸ்தானில் பல கிமீ வரை சென்று தீவிரவாத முகாம்களை அழித்தோம். இந்திய வரலாற்றில் பயங்கரவாதத்திற்கு எதிரான மிகப் பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான நடவடிக்கை தான் ஆப்ரேஷன் சிந்தூர்.
இதையும் படிங்க: எங்கு இருக்கிறார்களோ அங்கேயே அழிக்கப்படுவார்கள்... பாக்.,க்கு பிரதமர் மோடி எச்சரிக்கை!!

நான் மீண்டும் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எதிர்காலத்தில் இந்தியா மீண்டும் தாக்கப்பட்டால் பயங்கரவாதிகள் மட்டுமின்றி அவர்களை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். பயங்கரவாதிகள் மூலம் மறைமுகமாகப் போரை நடத்துவதை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதை ஆபரேஷன் சிந்தூர் தெளிவாக உலகிற்குக் காட்டியுள்ளது.

நீங்கள் எங்குப் பதுங்கி இருந்தாலும் உங்கள் வீட்டிற்குள் வந்து தாக்குவோம். பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்கள் எவரும் அதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும். இன்று, இந்திய பாதுகாப்புத் துறையில் பெண்களின் வலிமையை உலகம் காண்கிறது. நமது பிஎஸ்எஃப் மகள்கள் நமது எல்லைகளைப் பாதுகாத்து, ஆப்ரேஷன் சிந்தூரின் போது பொருத்தமான பதிலடி கொடுத்தனர் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாக். தாக்குதலால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்கள்... பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!!