சீனா, ஈரானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கு இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எந்த உரிமையும் இல்லை என்று கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி அறிவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் "எந்த தலைவராக இருந்தாலும் அவர்களை கொல்லுவோம்" என்று தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக சீனா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.
சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் செவ்வாய்க்கிழமை பெய்ஜிங்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: "ஈரானின் தலைமை மாற்றம் அந்நாட்டின் உள்நாட்டு விவகாரம். இது ஈரானின் அரசியலமைப்பு விதிகளின்படி எடுக்கப்பட்ட முடிவு. எந்த நாடும் எந்த காரணத்தை முன்வைத்தாலும், மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது. சீன அதிபர் ஷீ ஜின்பிங் இதை தெளிவாக எதிர்க்கிறார்."
மேலும், "ஈரானின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு முழுமையாக மதிக்கப்பட வேண்டும். வெளிநாடுகளின் அச்சுறுத்தல்கள் அல்லது தலையீடுகள் ஏற்கத்தக்கவை அல்ல" என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: இப்போ தொடுங்க பாப்போம்!! ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவு!! ரஷ்ய அதிபர் புடின் மீண்டும் உறுதி!

இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டணியின் தொடர் தாக்குதல்கள் மற்றும் மிரட்டல்களுக்கு மத்தியில் சீனாவின் இந்த அறிவிப்பு மேற்காசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனா ஈரானுடன் நெருங்கிய உறவு கொண்டுள்ளது. அமெரிக்க தடைகளுக்கு மத்தியிலும் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதியை சீனாவே வாங்கி வருகிறது. ஈரான்-சீனா உறவு "முழு மூலோபாய கூட்டாளித்துவம்" என்ற அளவுக்கு வலுப்பெற்றுள்ளது. சீனா மேற்காசிய பிரச்சினைகளை அந்நாடுகளே பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இஸ்ரேல் தரப்பில் மொஜ்தபா கமேனியின் நியமனத்தை "ஏற்க முடியாதது" என்று விமர்சித்து வரும் நிலையில், சீனாவின் கண்டனம் ரஷ்யாவின் ஆதரவுடன் இணைந்து ஈரானுக்கு பெரும் உறுதியை அளித்துள்ளது. இது அமெரிக்கா-இஸ்ரேல் அணியுடன் சீனா-ரஷ்யா-ஈரான் அணி இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேற்காசியாவில் தொடரும் போர் பதற்றம், எண்ணெய் விலை உயர்வு, உலக பொருளாதாரம் ஆகியவற்றுக்கு மத்தியில் சீனாவின் இந்த நிலைப்பாடு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரானின் புதிய தலைமைக்கு சீனாவின் ஆதரவு போர் நீடிப்பதற்கு வழிவகுக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: கமேனியின் அஞ்சலிக்கும் சிக்கல்!! ஓயாத தாக்குதல்!! இறுதி சடங்கை ஒத்திவைத்தது ஈரான்!!