2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஒரு புதிய அரசியல் அலையை உருவாக்கியது. முதல் முறையாகத் தேர்தலை எதிர்கொண்ட இந்தக் கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக மற்றும் அதிமுக போன்ற நீண்டகால அரசியல் கட்சிகளை பின்னுக்கு தள்ளிய இந்த வெற்றி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தவெகவுக்கு 108 இடங்களுடன் முழு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்தப் பற்றாக்குறை தவெகவை கூட்டணி அரசியலின் பக்கம் தள்ளியது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு வழங்கக் கோரினார். ஆனால், ஆளுநர் பக்கம் இருந்து தெளிவான பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வலியுறுத்தப்பட்டது. இந்தச் சூழலில் தவெக தனது 108 எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றது.

இதன் மூலம் ஆதரவு எண்ணிக்கை 113-க்கு உயர்ந்தது. இதைத்தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவை தமிழக வெற்றிக்கழகம் நாடியது. தொடர்ந்து சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் தங்களது நிபந்தனையற்ற ஆதரவை விஜய்க்கு கொடுத்தனர். இந்த நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளிப்பது குறித்த தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.
இதையும் படிங்க: எப்ப வேணாலும் புடுங்கிப்பாங்க..! தேவையா விஜய்..? மறுதேர்தல் கேட்கும் தங்கர் பச்சான்..!
தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக திருமாவளவன் அறிவித்துள்ளார். விஜய் முதல்வர் ஆகுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில் அதனை தீர்மானிக்கும் எண்ணிக்கையாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு இருந்து வந்தது. விஜய்க்கு ஆதரவா இல்லையா என்ற சந்தேகம் இருந்த நிலையில் தற்போது விஜய்க்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை திருமாவளவன் எடுத்துள்ளார். விஜய் முதல்வர் ஆகிறார் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு கொடுக்கும் கடிதத்தை ஆதவ் அர்ஜுனா பெற்றார். வெற்றி… வெற்றி… வெற்றி..! என தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். சற்று நேரத்தில் விஜய் ஆளுநரை சந்திக்க உள்ளார்.
இதையும் படிங்க: தவெகவை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் மாபெரும் போராட்டம்.! மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை..!