சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்ற விஜய், தினமும் தலைமைச் செயலகத்தில் துறை வாரியாக அதிகாரிகளுடன் விரிவான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள், மக்களுக்கு அது ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் சீர்திருத்த வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராய்ந்து வருகிறார்.
குறிப்பாக, சட்டம் ஒழுங்கு, மது போதை கலாச்சாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பிரச்சனைகள் கடந்த ஆட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம் எனக் கருதப்படும் நிலையில், முதல்வர் விஜய் மிக முக்கியமான துறைகளை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். காவல்துறை, பெண்கள் நலன், இளைஞர் நலன் மற்றும் குழந்தைகள் நலன் ஆகிய துறைகளை தன் வசம் வைத்துக் கொண்டார்.
மேலும், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை வேகமாக செயல்படுத்தும் சிறப்பு திட்ட அமலாக்கத் துறையையும் முதல்வர் தனது பொறுப்பில் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்! அடித்து விரட்டுவோம்! அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு!

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பெருநகரங்களில் த.வெ.க. பெரும் வெற்றி பெற்றதால், நகர்ப்புற மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளையும் தன் வசம் வைத்துள்ளார்.
இதுதவிர, சுகாதாரம், பள்ளிக்கல்வி, ஊரக வளர்ச்சி, டாஸ்மாக், போதைப்பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான துறைகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து, அவர்கள் மூலம் நேரடியாக கண்காணிக்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வரின் இந்த அணுகுமுறை, அரசு இயந்திரத்தை வேகப்படுத்தும் என்றும், மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண உதவும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றில் விரைவான முன்னேற்றத்தை மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
முதல்வர் விஜய்யின் தினசரி ஆய்வு மற்றும் நேரடி கண்காணிப்பு தமிழக அரசின் செயல்பாட்டை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: அமைச்சர்கள் நியமிக்கப்படாத முக்கிய இலாகா! யாருக்காக காத்திருக்கிறார் முதல்வர் விஜய்!!