இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், எளிமையின் சிகரமுமான தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் உடல், 101 ஆண்டுகால வரலாற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்பட்டது. தியாகராய நகரில் உள்ள 'பாலன் இல்லத்தில்' வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

தமிழக அரசின் உயரிய 'தகைசால் தமிழர்' விருது பெற்றவர் என்பதால், அவரது பொதுவாழ்வைப் போற்றும் வகையில் முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது. காவல்துறையினரின் அணிவகுப்புடன், வானத்தை நோக்கித் துப்பாக்கி குண்டுகள் முழங்கத் தோழர் நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி செலுத்திய பின் பேசிய முதலமைச்சர், நமது சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்றப் போராளி மறைந்துவிட்டார். கொள்கை உறுதிக்கும் எளிமைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த அவரை முழு அரசு மரியாதையுடன் வழியனுப்புவது தமிழக அரசுக்குக் கிடைத்தப் பெருமை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...!!

தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக வாழ்ந்த தோழர் நல்லகண்ணு, தனது மறைவிற்குப் பிறகும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில், தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்க வேண்டும் என ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி, அரசு மரியாதை முடிந்த பிறகு அவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரியிடம் (Madras Medical College) ஒப்படைக்கப்படஉள்ளது. தியாகராய நகர் பாலன் இல்லத்திலிருந்து தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் 'செவ்வணக்கம்' முழக்கங்களுடன் பங்கேற்றனர்.
தமிழக அரசியலில் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்த தோழர் நல்லகண்ணுவின் மறைவு, அரசியல் எல்லைகளைத் தாண்டி ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் ₹1,785 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்... முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!