ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் நாடாளுமன்றக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான குழு, அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் பயணம் மேற்கொண்டு வருகிறது. சசி தரூர் தலைமையிலான குழுவில், ஷாம்பவி, சர்பராஸ் அகமது, ஹரிஷ் பாலயோகி, ஷஷாங்க் மணி திரிபாதி, புபனேஸ்வர் காலிதா, மிலிந்த் தியோரா, தேஜஸ்வி யாதவ், தரஞ்சித் சிங் சாந்து உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரின் தொடக்கத்தில் இருந்து மத்திய அரசுக்கு ஆதரவாக சசி தரூர் பேசி வருகிறார். இந்த நிலையில் பனாமா நாட்டில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி சசி தரூர், பயங்கரவாதம் தொடர்பான இந்தியாவின் கண்ணோட்டம் மாறிவிட்டது. பயங்கரவாதிகளும் இந்தியாவை பார்த்து பயப்பட துவங்கிவிட்டனர். பயங்கரவாத தாக்குதல் நடத்தினால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என அவர்களும் உணரத்துவங்கிவிட்டனர்.
இதையும் படிங்க: இரட்டை வேடம் போடும் பாக்., பயங்கரவாதத்தை ஒழிக்க இத்தாலிக்கு இந்தியா அழைப்பு..!

இதில் சந்தேகம் வேண்டாம். முதல்முறையாக, இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி சென்ற இந்தியா, 2015 ம் ஆண்டு உரி தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் தாக்குதல் மூலம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு முன்னர் அப்படி நடந்தது இல்லை. கார்கில் போரின் போது கூட அப்படி செய்யவில்லை. உரி பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு அதனை செய்தோம்.
2019 புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் போது எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை மட்டுமல்லாமல், சர்வதேச எல்லையை தாண்டி, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத தலைமையகம் மீது தாக்குதல் நடத்தினோம். இந்த முறை இந்த இரண்டு பகுதிகளையும் தாண்டி சென்று பாகிஸ்தானின் இதயப்பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள், அதன் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தினோம் எனக்கூறினார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்பியுமான உதித் ராஜ், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகப் பேசுவதில் பாஜகவினரை விஞ்சும் வகையில் அக்கட்சியின் சூப்பர் செய்தித் தொடர்பாளராக சசி தரூர் செயல்படுவதாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”என் அன்பான சசி தரூர், நீங்கள் இந்தியாவில் தரை இறங்கும் முன் பிரதமர் மோடி உங்களை பாஜகவின் சூப்பர் செய்தித் தொடர்பாளராக அறிவிக்கலாம், ஏன் வெளியுறவு அமைச்சராகவும்கூட அறிவிக்கலாம் என்று கூறினார்.

தொடர்ந்து காங்கிரஸ் தரப்பில் இருந்து சசிதரூருக்கு எதிராக விமர்சனங்கள் முன் வைக்கப்படும் சூழலில் அவருக்கு பா.ஜ., ஆதரவுக்கரம் நீட்டி இருக்கிறது. இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது; காங்கிரசுக்கு என்ன வேண்டும்? நாட்டின் மீது அவர்களுக்கு என்ன அக்கறை இருக்கிறது? வெளிநாடு சென்றிருக்கும் இந்திய எம்.பி.,க்கள் பிரதமருக்கும், நாட்டுக்கும் எதிராக பேச வேண்டுமா? அரசியலில் விரக்திக்கும் ஒரு எல்லை உண்டு என கிரண் ரிஜூஜூ குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கார்கில் போருல நடக்காதது, ஆபரேஷன் சிந்தூர்ல நடந்தது! சசி தரூர் வெளியிட்ட ரகசியம்!